ரஷ்யா-உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அரசியல் ரீதியான அமைதித் திட்டம் ஒன்றை வகுத்து வெளியிடப்போவதாக சீனா உறுதி அளித்திருந்தது.
ஆனால் சீனாவின் இந்த அமைதித் திட்டம் இன்னும் தம்மை வந்தடையவில்லை என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சீனாவின் பரிந்துரைகளைப் பற்றி அறிந்துகொள்ள அந்
நாட்டுத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.
அவர்களுடன் கலந்துரையாடிய பிறகே சீனாவின் பரிந்துரைகள் குறித்து மதிப்பீடு செய்ய முடியும் என அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
ரஷ்யா-உக்ரேன் இடை
யிலான போரில் யார் பக்கமும் சாயாமல் நடுநிலையுடன் இருப்பதாக சீனா கூறி வருகிறது.
ஆனால் தனது உத்திபூர்வ நட்பு நாடான ரஷ்யாவுடன் சீனா நெருங்கிய உறவைத் தொடர்கிறது.
"உக்ரேன் பற்றி சீனா பேசத் தொடங்கியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும் அது சூசகமாகக் கூறி வருகிறது. இது வரவேற்கத்தக்கது.
"இருப்பினும், சீனா முன்வைக்கும் பரிந்துரைகளை ஆராய்ந்த பிறகே அவற்றை ஏற்பதா, மறுப்பதா என்பது குறித்து முடிவெடுப்போம்.
"சீனத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட விரும்புகிறோம்," என்று திரு ஸெலென்ஸ்கி கூறினார்.
இதற்கிடையே, ரஷ்யா-உக்ரேன் போர் தொடங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில், திரு ஸெலென்ஸ்கியுடன் ஜி7 நாடு
களின் தலைவர்கள் மெய்நிகர் உச்சநிலை மாநாடு வாயிலாக நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர்.
கலந்துரையாடலை ஜி7 நாடு
களுக்குத் தற்போது தலைமைதாங்கும் ஜப்பான் வழிநடத்தியது.
கலந்துரையாடலுக்கு முன்பு உக்ரேனுக்கு உதவி செய்யும் வகையில் கூடுதலாக 2 பில்லியன் அமெரிக்க டாலர் (S$2.7 பில்லியன்) பெறுமானமுள்ள ஆயுதங்களை அனுப்பிவைக்க இருப்பதாக அமெரிக்கா உறுதி அளித்தது.
அதுமட்டுமல்லாது, ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை வலுப்படுத்த தேவையான நட
வடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அது கூறியது. ரஷ்யாவின் போர் ஆற்றலை முடக்க அதற்கு எதிராகப் புதிய தடைகளையும் அது அறிவித்தது.
ரஷ்யாவுக்கு ராணுவ உதவி வழங்க வேண்டாம் என்று மற்ற நாடுகளுக்கு ஜி7 நாடுகள் மீண்டும் அழைப்பு விடுத்திருப்பதாக ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறினார்.
உக்ரேனுக்கு எதிரான போரில் ஈரானிடமிருந்து வாங்கிய ஆளில்லா வானூர்திகளை ரஷ்யா பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

