நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் முன்கூட்டியே ஹெல்தியர் எஸ்ஜி எனும் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மூலம் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் ஆகியோர் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கவும் நன்கு நிர்வகித்துக்கொள்ளவும் தனியார் மருத்துவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
தேசிய அளவிலான இத்திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
நாள்பட்ட நோய் உள்ள 40 வயது அல்லது அதற்கும் மேற்பட்டோருக்காக திட்டத்தில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளும் பயிற்சி வரும் மே மாதம் முதல் நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார். மற்றவர்களுக்கு ஹெல்தியர்எஸ்ஜி திட்டம் ஜூலை மாதம் தொடங்குகிறது. 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்டோர் முதலில் பதிவு செய்துகொள்ளலாம். பிறகு 40 வயதிலிருந்து 59 வயது வரையிலானோருக்கு இத்திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நீட்டிக்கப்படும்.
தங்களுக்கு இருக்கும் நாள்பட்ட நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்க குறிப்பிட்ட ஒரே தனியார் மருத்துவரை அடிக்கடி பார்ப்பவர்கள் ஹெல்தியர்எஸ்ஜி திட்டத்தில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம் என்றும் திட்டத்தில் பங்கெடுக்க அந்த மருத்துவர் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஓங் தெரிவித்தார்.
நோய் வரும் முன் காக்கும் அணுகுமுறைக்கு சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத்துறை மாறுவதை இத்திட்டம் காட்டுகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்துக்கான ஆதரவு அளவுக்கு அதிகமாக இருந்தால் சிகிச்சைக்காக தங்களிடம் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, சமாளிக்க முடியாத அளவுக்குப் போய்விடும் என்று மருத்துவர்கள் சிலர் அக்கறை தெரிவித்துள்ளதாக திரு ஓங் கூறினார்.
ஹெல்தியர்எஸ்ஜி திட்டத்தில் பதிவு செய்தவுடன் முதல்முறையாக மருத்துவரைக் காணச் செல்லும்போது இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். உணவுப் பழக்கம், உடற்பயிற்சி செய்யும் முறை, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கும் சுகாதாரத் திட்டம் ஒன்றை மருத்துவர் வகுத்துத் தருவார். நேற்று பாசிர் ரிஸ் சென்ட்ரலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட திரு ஓங் இவை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவும் முனைப்பில், இலவச மளிகைப் பொருள்கள் விநியோகம், இரண்டு வாரத்திற்கு ஒருமுறை நடைபெறகிறது. பாசிர் ரிஸ் சென்ட்ரல் வட்டாரத்தில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்கள், காய்
கறிகள், பழங்கள் போன்றவற்றை இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். கொள்ளைநோய்க்குப் பிறகு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இந்தச் சூழலில், சமுதாயத்தினர் அனைவரையும், பல்வேறு திட்டங்கள் மூலம் ஒன்றிணைக்க காத்திருக்கிறோம் என்றார் பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்தொகுதியின் ஆலோசகரான திரு டெஸ்மண்ட் டான்.
கூடுதல் செய்தி:
அனுஷா செல்வமணி

