பொன்மணி உதயகுமார்
வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் கேளிக்கை மன்றத்தில் நேற்று நடந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கான உடற்கட்டழகுப் போட்டியில் பல்வேறு தங்குவிடுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 50 ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
வெற்றியாளருக்கு பரிசுக்கிண்ணமும் போட்டியாளர்கள் அனைவருக்கும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இப்போட்டியில் பங்கேற்க விரும்பியோருக்கு, 'ஏபிபிஎஸ்' எனும் சிங்கப்பூர் உடற்கட்டழகு, உடல்விளையாட்டுச் சங்கம் கடந்த இரு மாதங்களாக இலவசப் பயிற்சியளித்தது. போட்டியில் காட்சிதரும் முறை குறித்தும் பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கம் குறித்தும் அவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களின் திறமைகளை வெளிப்படுத்த உதவும் நோக்கில், இப்போட்டிக்கு ஏற்பாடு செய்ததாக வெளிநாட்டு ஊழியர் நிலையம் கூறியது. அத்துடன், அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையையும் உணவுமுறையையும் பின்பற்ற இப்போட்டி ஊக்குவிக்கும் என்று நிலையம் நம்புகிறது.
மேலும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் விடுப்புநாள்களை அர்த்தமுள்ள முறையில் செலவிடவும் இதுநல்ல வாய்ப்பாக அமையும் என்று நிலையம் குறிப்பிட்டது.
போட்டியின் வெற்றியாளராக மகுடம் சூடினார் காக்கி புக்கிட் விடுதியைச் சேர்ந்த ஜர்மஞ்சித் சிங், 29. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர பயிற்சி மேற்கொண்டபோது உடற்கட்டழகுமீது தமக்கு ஆர்வம் பிறந்ததாக குறிப்பிட்ட அவர், சிங்கப்பூரிலும் இதுபோன்ற போட்டியில் கலந்துகொள்ள தமக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

