பொறியியல் மாணவர் ஒருவர், தன் நண்பனைக் கொன்று, தலையைத் துண்டித்து, வயிற்றைக் கிழித்து, இதயத்தை வெளியே எடுத்து, ஆணுறுப்பையும் விரல்களையும் துண்டாக்கி, வீசி எறிந்தார்.
ஹரிஹர கிருஷ்ணா, 21, என்ற அம்மாணவர், தன் காதலிக்குத் தொந்தரவு தந்ததற்காக என்.நவீன் என்ற தன் 22 வயது நண்பனையே இப்படிக் கொடூரமாகக் கொலைசெய்தார்.
இந்தக் கோர சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் இம்மாதம் 18ஆம் தேதி அரங்கேறியது.
கிருஷ்ணா கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறையில் சரண் அடைந்து, நவீனைக் கொன்றதை ஒப்புக்கொண்ட பிறகே, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனையடுத்து, மாண்ட நவீனின் குடும்பத்தினர் மறுநாள் சனிக்கிழமை காவல் நிலையத்தில் நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்கொண்டாவில் உள்ள மகாத்மா காந்தி பொறியியல் கல்லூரியில் நண்பர்கள் இருவரும் படித்து வந்தனர். அப்போது, நவீனும் ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். ஈராண்டுகளுக்குப்பின் அவர்கள் பிரிந்துவிட்டனர்.
அதன்பின் அப்பெண் கிருஷ்ணாவுடன் நெருக்கமாகி, அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகும், நவீன் அப்பெண்ணைக் கைப்பேசியில் அழைப்பதும் குறுஞ்செய்தி அனுப்புவதுமாக இருந்ததாகக் கூறப்பட்டது.
மூன்று மாதங்களுக்குமுன் இதுபற்றி கிருஷ்ணாவிடம் அப்பெண் கூறினார். அதனை அடுத்து, நவீனைத் தீர்த்துக்கட்ட கிருஷ்ணா முடிவுசெய்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
கடந்த 17ஆம் தேதி ஒன்றாகச்சேர்ந்து பொழுதுபோக்கலாம் எனக் கூறி, நவீனை அழைத்தார் கிருஷ்ணா.
அவரது வீட்டில் சந்தித்தபின், வெளியே சென்று நகரில் சில மணி நேரம் சுற்றினர். பின்னர் தான் கல்லூரி விடுதிக்குத் திரும்புவதாக நவீன் கூறினார்.
அவரைத் தன் மோட்டார்சைக்கிளிலேயே அழைத்துச் சென்று விடுதியில் விட்டுவிடுவதாகக் கூறி, பெத்த ஆம்பர்பேட் பகுதியில் ஆளரவமற்ற இடத்திற்குக் கூட்டிச் சென்றார் கிருஷ்ணா.
வழியிலேயே அவர் மது அருந்தியதாகவும் ஒரு கத்தி வாங்கியதாகவும் காவல்துறை தெரிவித்தது.
பின்னர் போதையில் நவீனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிருஷ்ணா, கயிற்றால் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றார். இக்கொலை 18ஆம் தேதி அதிகாலையில் நிகழ்ந்தது.
நவீனைக் கொன்றபின் அவரது தலையைத் துண்டித்த கிருஷ்ணா, அவரது வயிற்றைக் கிழித்து, இதயத்தை அகற்றியதாகவும் கூறப்பட்டது.
பின்னர், நவீனின் ஆணுறுப்பையும் விரல்களையும் வெட்டி வீசிவிட்டு, தமது மோட்டார்சைக்கிளில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டதாகக் காவல்துறை விளக்கமாகக் கூறியது.
நவீனின் துண்டாக்கப்பட்ட உடலைப் படம்பிடித்த கிருஷ்ணா, அப்படங்களை வாட்ஸ்அப் வழியாகத் தன் காதலிக்கு அனுப்பி வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
நவீனைக் காணாததால் அவரின் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். காவல்துறையிடம் கிருஷ்ணா சரணடைந்து, நடந்ததை விவரித்த பின்னரே, நவீனுக்கு நடந்த கொடூரம் தெரியவந்தது.
கிருஷ்ணாவைக் கைதுசெய்த காவல்துறை, அவர்மீது கொலை, சான்றுகளை அழித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

