தேசிய சேவையாளர்க்கு மேம்பட்ட அனுபவம் தரும் தற்காப்பு அமைச்சின் திட்டங்கள்
தயார்நிலை தேசிய சேவையாளர்கள் இனி 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கு மட்டும் அனுமதிக்கு விண்ணப்பித்தால் போதுமானது.
வரும் ஏப்ரல் மாதம் இந்த நடைமுறை நடப்புக்கு வரும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது இந்தக் கால வரம்பு ஆறு மாதங்களாக உள்ளது. தேசிய சேவை அனுபவத்தை மேம்படுத்த அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஓர் அங்கமாக இந்த மாற்றம் அமைகிறது.
தேசிய சேவையாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் திட்டங்கள் உள்ளன என்று தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஹெங் சீ ஹாவ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சின் இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் குறித்த விவாதத்தின்போது அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
"சிங்கப்பூரின் தேசிய சேவையாளர்கள் பலரும் கல்வி அல்லது வேலையின் பொருட்டு நீண்டகாலம் வெளிநாடுகளில் தங்க நேரிடுவதை இந்த மாற்றம் பிரதிபலிக்கிறது," என்றார் அவர்.
தேசிய சேவையாளர்கள் வெளிநாடு செல்ல நேரிடுவதன் தொடர்பில் எதிர்நோக்கும் சிக்கல்களைக் குறைப்பது குறித்து பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ வான் லிங் எழுப்பிய கேள்விக்குத் திரு ஹெங் பதிலளித்தார். தற்காப்பு அமைச்சு இந்த விவகாரத்தை அணுக்கமாக ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாற்றத்தால் சிங்கப்பூர் ஆயுதப் படையின் தயார்நிலை பாதிக்கப்படாது என்றார்.
நாட்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. முழு நேர தேசிய சேவையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இவற்றைக் கருத்தில்கொண்டு தேசிய சேவையாளர்களை சிங்கப்பூர் ஆயுதப் படையின் பல்வேறு பிரிவுகளில் மேம்பட்ட முறையில் பணியமர்த்த, அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளையும் திரு ஹெங் எடுத்துரைத்தார்.
பொருத்தமான திறன்களின் அடிப்படையில் ராணுவ வீரர்களின் பணி நியமனம் அமைவது குறித்த கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
பைனியர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டே, அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கான் தியாம் போ ஆகியோரின் கேள்விகளுக்கும் திரு ஹெங் பதிலளித்தார்.
சிங்கப்பூர் ஆயுதப் படை 2021ஆம் ஆண்டில் இருந்து 1,300 வேலைகளை மறுவடிவமைத்துள்ளது.
செயலாக்கப் பணிகளில் முன்பைவிட அதிகமான தேசிய சேவையாளர்கள் நியமிக்கப்படுவதற்கு இது உதவும் என்று திரு ஹெங் தெரிவித்தார்.
"கவச வாகன ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் போன்ற வேலைகள் மறுவடிவமைக்கப்பட்டன. அடுத்த ஆண்டு மத்திக்குள் மேலும் 500 வேலைகள் மறுவடிவமைக்கப்படும்," என்று அவர் கூறினார்.
புதிய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் தேசிய சேவையாளர்களின் எண்ணிக்கையை ஆயுதப்படை அதிகரித்துள்ளது.
அவர்கள் வெளியுலகில் பெறும் நிபுணத்துவத்தை தேசிய சேவைப் பயிற்சியில் பயன்படுத்த வழிவகுப்பது இதன் நோக்கம்.
சென்ற ஆண்டு 200 தேசிய சேவையாளர்கள் இவ்வாறு புதிய வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்பு அந்த எண்ணிக்கை 50 ஆக இருந்தது.
மின்னிலக்கம், உளவுத்துறை, தளவாடம், பொறியியல் போன்றவற்றில் புதிதாகப் பலர் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆர்வமுள்ள தேசிய சேவையாளர்கள் இத்தகைய திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
நாட்டின் தற்காப்புக்குப் பங்களிக்கும் அதேவேளையில் தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ளவும் தேசிய சேவையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்றார் திரு ஹெங்.
சிங்கப்பூர் ஆயுதப்படை வேலை-கல்வித் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளதை அவர் சுட்டினார்.
இதன் தொடர்பில் ஆறு திட்டங்கள் நடப்பில் உள்ளன.
தேசிய சேவையாளர்கள் மின்னிலக்கம், இணையப் பாதுகாப்பு, பொறியியல் உள்ளிட்ட துறைகளில் வேலைபார்த்துக்கொண்டே படித்து, பட்டயம் பெற இத்திட்டங்கள் கைகொடுக்கும்.
இத்திட்டங்கள் மூலம் பலன் அடைந்த தேசிய சேவையாளர்கள், வருங்கால வேலைக்கான திறன்களைப் பெற இது உதவுவதாகக் கூறுகின்றனர்.
இதுவரை 450 முழுநேர தேசிய சேவையாளர்கள் இத்தகைய கல்வித் திட்டங்களுக்குப் பதிந்து கொண்டிருப்பதாக தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஹெங் குறிப்பிட்டார்.
வரும் 2025ஆம் ஆண்டிற்குள் வேலை-கல்வித் திட்டத்திற்கு ஆண்டுதோறும் 500 முழு நேர தேசிய சேவையாளர்கள் பதிந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
மேலும் நாடாளுமன்றச் செய்திகள் பக்கம் 2ல்

