இந்தியாவிற்கான தென்கொரியத் தூதர் சாங் ஜே-போக், புகழ்பெற்ற 'நாட்டு நாட்டு' எனும் தெலுங்குப் பாடலுக்கு நடனமாடிப் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
புதுடெல்லியில் அமைந்துள்ள தென்கொரியத் தூதரக வளாகத்தில், தமது ஊழியர்களுடன் இணைந்து அவர் நடனமாடிய காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
பல விருதுகளை வென்றுள்ள 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு இவர்கள் ஆடிய நடனக் காணொளியை இந்தியாவிற்கான தென்கொரியத் தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டது.
அதையடுத்துப் பல்லாயிரம் பேர் அக்காணொளியை ரசித்துப் பாராட்டியதுடன் மீண்டும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.
இவ்வாறு பகிர்ந்தவர்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர்.
மிகவும் துடிப்பான, பாராட்டுதலுக்கு உரிய குழு முயற்சி என்றும் திரு மோடி கருத்துரைத்துள்ளார்.
பாகுபலி படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் ராஜமௌலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம், 1920களின் காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிய இரு புரட்சியாளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது.
ஆங்கிலத்தில் 'ரைஸ் ரோர் ரிவோல்ட்' என்பதன் சுருக்கமாக இப்படத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.
ஹாலிவுட் திரையுலகிலும் இது சில அங்கீகாரங்களைப் பெற்றுவருகிறது.
சென்ற வாரம் ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதளிப்பு நிகழ்ச்சியில், 'ஆர் ஆர்ஆர்' படம் சிறந்த அனைத்துலகத் திரைப்படத்திற்கான விருதையும் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த அசலான பாடல் எனும் விருதையும் வென்றன.
முன்னதாக, சென்ற மாதம் நடைபெற்ற 80ஆவது 'கோல்டன் குளோப்' விருது விழாவில் சிறந்த அசல்தன்மை உடைய பாடலுக்கான விருதை இப்பாடல் வென்றது. இவ்விருதை வென்ற முதல் இந்திய, ஆசியப் பாடல் என்ற சிறப்பும் இதற்குண்டு.
'நாட்டு நாட்டு' பாடலில் சிறந்த நடன அசைவுகள் இடம்பெற்றிருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்ப்பதுடன் ஆடத் தூண்டுவதாக திரைப்பட ரசிகர்கள் கருத்துரைக்கின்றனர்.
இந்த ஆண்டின் ஆஸ்கார் விருதுகளுக்கும் இப்பாடல் நியமனம் பெற்றுள்ளது. பாடலாசிரியர் சந்திரபோஸ் இயற்றிய இப்பாடலுக்கு இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார்.

