பொருளியல் வளரும் சூழல் அதிக சவாலாக விளங்கும் வேளையில் சிங்கப்பூர் போட்டித்தன்மைக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஓர் உலக வர்த்தக மையம் என்பதைக் கட்டிக்காக்க எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.
வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நேற்று இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். உற்பத்தித்திறன் அதிகரிப்பு நடவடிக்கைகளைத் தொடரும் வேளையில் நிபுணத்துவ, நிதிச் சேவைகள் மீது சிங்கப்பூர் தமது மேம்பட்ட கவனத்தைச் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமது அமைச்சின் செலவினத் திட்டத்தின்மீது உரையாற்றிய திரு கான், சுலபமாக வர்த்தகம் புரிவதற்கு ஏற்ற ஆண்டாக இது இல்லாவிட்டாலும், தேவைப்படும் நேரத்தில் தமது ஆதரவை அளிக்க அரசாங்கம் தயங்காது என்றார்.
"பொருளியல் வளர்ச்சி இந்த ஆண்டில் மெதுவடையலாம் என்ற நிலையில் உயரும் சம்பளம் வர்த்தகச் செலவுகளை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
"உலக அரங்கில் சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிநடை போடுவதை உறுதி செய்ய, வர்த்தகங்களும் ஊழியர்களும் தங்களது ஆற்றலையும் உற்பத்தித்திறனையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
"அதேநேரம், 'சிங்கப்பூர் பொருளியல் 2030' என்னும் தொலைநோக்குத் திட்டத்திற்கான குறிக்கோள்களை சிங்கப்பூர் அடைய வேண்டுமாயின் உருமாற்றத்திற்கும் அவர்கள் தயாராக இருக்கவேண்டும்.
"விலைகள் உயர்ந்து, வளங்களைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டு, அனைத்துலகச் சூழல் மிகவும் சவாலான ஒன்றாக மாறிவரும் இந்நிலையில் நீண்டகால வளர்ச்சியையும் வெற்றியையும் ஈட்ட, இவ்வாறு பாடுபடுவது ஒன்றே வழி," என்று அமைச்சர் கான் கூறினார்.
முழுநேர சிங்கப்பூர் ஊழியர்
களின் மாதாந்திர இடைநிலை வருமானம் கடந்த ஆண்டு 8.3 விழுக்காடு அதிகரித்ததாக அவர் தெரிவித்தார். பணவீக்க நிலவரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டாலும் இயல்பான இடைநிலை வருமானம் 2 விழுக்காடு அதிகமாகவே உள்ளதாகவும் திரு கான் குறிப்பிட்டார்.
"அதிக சம்பளங்கள் வர்த்தகச் செலவை அதிகரிக்கும் அதேவேளை அந்த சம்பள உயர்வுக்கு உறுதுணை புரியும் வகையில் உற்பத்தித்திறனும் அதிகரிப்பதை உறுதிசெய்வது அவசியம். அப்போதுதான் வர்த்தகமும் ஊழியர்களும் பலனடைய முடியும்," என்றும் அமைச்சர் கான் தமது உரையில் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு 3.6% வளர்ந்த பொருளியல் இவ்வாண்டு 0.5% முதல் 2.5% வரையிலேயே இருக் கும் என்று எதிர்பார்க்கப்படு வதாக அவர் கூறினார்.

