அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள கால்வாய் ஒன்றில் 11 வயதுடைய இரட்டை ஆண்குழந்தைகள் கழுத்தை நெரித்துக் கொல்லப் பட்ட வழக்கில் குழந்தைகளின் தந்தை மீது சுமத்தப்பட்டு இருந்த கொலைக் குற்றச்சாட்டு நோக்கமில்லா மரணம் என்று குறைக்கப்பட்டுள்ளது.
சேவியர் யாப் ஜங் ஹுன், 49, எனப்படும் அந்த ஆடவர் மீதான இரு குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்டு உள்ளன.
மனநலக் கழகம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிகழ்ந்த வேளையில் சேவியர் யாப் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தது கண்டறியப்பட்டதாக அது கூறியது.
ஆஸ்டன் யாப் காய் ஷெர்ன், ஏதன் யாப் இ செர்ன் எனப்படும் இரட்டை ஆண் குழந்தைகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி மாலை 4.25 மணிக்கும் 6.20 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கிரீன்ரிட்ஜ் கிரசென்ட் விளையாட்டுப் பகுதியில் உள்ள கால்வாயில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
சம்பவம் நடந்த அன்று மாலை 6.25 மணியளவில் உதவி கேட்டு காவல்துறையை சேவியர் அழைத்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
மாண்ட இரு சிறுவர்களும் சிறப்புத் தேவையுள்ள குழந்தைகள் என்று நம்பப்படுகிறது.வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.
காணொளி இணைப்பு வழியாக நேற்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போது சேவியர் தலைகுனிந்து காணப்பட்டார். அவரைப் பிரதிநிதித்து இரு சட்ட நிறுவனங்களைச் சார்ந்த நான்கு வழக்கறிஞர்கள் வாதாடினர்.
நோக்கமில்லா மரணக் குற்றம் கொலைக்குற்றமாகாது. கொலை செய்யும் நோக்கம் எதுவுமின்றி செய்யப்படும் குற்றமாக இது கருதப்படும்.
இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். பிரம்படிகளும் தரப்படலாம். அல்லது 20 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

