கிரீசில் நேற்றுமுன்தினம் இரவு இரு ரயில்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர். 85 பேர் காயமடைந்துள்ளனர். ஏறக்குறைய 250 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிரீஸ் தலைநகர் ஏதென்சில் இருந்து தெசலானிகி நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயிலும் தெசலானிகியில் இருந்து லரிசா நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலும் மோதின. மோதிய வேகத்தில் பயணிகள் ரயிலின் முதல் நான்கு பெட்டிகள் தடம்புரண்டன என்றும் முதலிரு பெட்டிகள் கிட்டத்தட்ட முற்றிலும் நொறுங்கிப்போயிருந்தன என்றும் தெசலி வட்டார ஆளுநர் திரு கான்ஸ்டன்டினோஸ் அகோராஸ்டோஸ், ஸ்கை தொலைக்காட்சியிடம் சொன்னார்.
சுரங்கப் பாதையிலிருந்து பயணிகள் ரயில் வெளிவந்தபோது விபத்து ஏற்பட்டது. "கொடுங்கனவு" என்று விபத்தை வர்ணித்த விபத்தில் தப்பிப் பிழைத்த 28 வயது திரு ஸ்டெர்ஜியோஸ், பெரும் வெடிப்புச் சத்தத்தைத் தீ ஏற்பட்டதாக கூறினார்.
"ரயிலில் பெரும் பீதி நிலவியது. பயணிகள் அலறியபடி இருந்தனர் என்றும் ரயிலிலிருந்து மீட்கப்பட்ட இளையர் ஒருவர் கூறினார்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் மீட்புப் பணியுமே தற்போது முன்னுரிமை என்று அரசாங்கப் பேச்சாளர் கூறினார். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

