தேவைக்கு ஏற்ப கட்டப்படும் (பிடிஓ) வீட்டுக்கு முதல்முறையாக விண்ணப்பம் செய்பவர்கள், வீட்டைத் தேர்ந்தெடுக்க அழைக்கப்படும்போது அழைப்பை ஏற்று வீட்டை தேர்ந்தெடுக்க வராவிடில் அடுத்த ஓராண்டுக்கு முதல்முறை விண்ணப்பதாரர் முன்னுரிமையை இழப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாத பிடிஓ விற்பனை முதல் இந்தப் புதிய அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்படும்.
வீட்டைத் தேர்ந்தெடுக்க அழைத்தும் அவ்வாறு செய்யாதோரின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உண்மையிலேயே வீடு தேவைப்படுவோருக்கு வீடு விரைவாகக் கிடைக்கவும் விதிமுறை கடுமையாக்கப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தெரிவித்தார். தற்போதைய நடைமுறைப்படி முதல்முறை விண்ணப்பதாரர்கள், இருமுறை அழைக்கப்பட்டும் வீட்டைத் தேர்ந்தெடுக்க வராவிடில் அவர்கள் அடுத்த ஓராண்டுக்கு இரண்டாவது முறையாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு வாங்குவோராக கருதப்படுவர். இரண்டாவது முறையாக வீவக வீடு வாங்குவோருக்குக் குறைவான பிடிஓ வீடுகளே ஒதுக்கப்படுகின்றன. இத்தகையோருக்கு நான்கறை வீடுகள் அல்லது அதற்கும் பெரிய வீடுகளில் ஐந்து விழுக்காடு வீடுகள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன.
மாறாக, முதல்முறை விண்ணப்பதாரர்களுக்கு 95 விழுக்காடு வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.
தேசிய வளர்ச்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது முதல்முறை விண்ணப்பதாரர்களுக்கு உதவ மேலும் பல திட்டங்கள் குறித்து திரு லீ அறிவித்தார். முதல்முறை விண்ணப்பம் செய்யும் குடும்பங்களுக்குக் கூடுதல் பிடிஓ வீடுகள் ஒதுக்கப்படும் என்றார் திரு லீ.
சிங்கப்பூர் குடியுரிமை உள்ள 18 வயது அல்லது அதற்கும் குறைந்த வயதுப் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள், 40 வயது அல்லது அதற்கும் குறைவான திருமணமான தம்பதியருக்கு இந்தச் சலுகை வழங்கப்படும். வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் பிடிஓ விற்பனையிலிருந்து இப்பிரிவினருக்கு 40 விழுக்காடு வீடுகள் ஒதுக்கப்படும். தற்போது 30 விழுக்காடு வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.
விற்கப்படாமல் எஞ்சியிருக்கும் வீடுகளில் 60 விழுக்காடு வரை இப்பிரிவினருக்கு ஒதுக்கப்படும்.
தற்போது 50 விழுக்காடு வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. விற்கப்படாமல் எஞ்சியிருக்கும் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டவை அல்லது கட்டி முடிக்கப்படாதவையாகவும் இருக்கலாம். இப்பிரிவினருக்குக் கூடுதல் குலுக்கல் முறை வாய்ப்பு வழங்கப்படும். இவர்களுக்கு மொத்தம் மூன்று குலுக்கல் முறை வாய்ப்புகள் வழங்கப்படும்.

