சிங்கப்பூரில் நாளையும் மழை பெய்யக்கூடும் என்பதால் வெளியில் செல்லும்போது குடையுடன் செல்வது நல்லது.
இன்று வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமையும் மழை தொடரும் என்றும் சில வேளைகளில் கனமழை பெய்யலாம் என்றும் தேசிய சுற்றுப்புற வாரியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் வெப்பநிலை குறைந்து, 21 - 22 டிகிரி செல்சியசுக்கு இடைப்பட்டு இருக்கலாம் என்றும் வாரியம் கூறியுள்ளது.
இதனிடையே, காலாங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை 225.5 மிமீ மழை பதிவானது என்றும் இதற்குமுன் பிப்ரவரி மாதத்தில் ஒரே நாளில் இவ்வளவு மழை பெய்ததில்லை என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
மார்ச் முதல் வாரத்தில் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிலையம் குறிப்பிட்டது.
ஒப்புநோக்க, இம்மாதத்தின் பிற்பகுதியில் சற்று வறண்ட வானிலை நிலவலாம் என்றும் சில நாள்களில், சில பகுதிகளில் பிற்பகல் பின்னேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் நிலையம் முன்னுரைத்துள்ளது.