இந்தியாவில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ‘ஹால்மார்க்’ முத்திரை இல்லாமல் தங்க நகைகளை விற்க முடியாது.
நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு ஹால்மார்க் முத்திரை இல்லாமல் தங்க நகைகளை விற்க மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு அனுமதியில்லை என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக இந்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சின் செயலாளர் நித்தி காரே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
‘HUID’ எனப்படும் ஆறு இலக்க தனித்துவமான எண்கள் தங்கத்தின் தரத்தை உறுதி செய் கிறது. தங்க நகைகள் செய்யப்படும்போது ஒவ்வொரு நகைக்கும் தனிப்பட்ட ஹால்மார்க் எண் வழங்கப்படுவதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிரத்யேக எண், மதிப்பாய்வு, ஹால்மார்க் நிலையங்களில் நகைகளின் மீது முறையாக முத்திரையிடப்படுகிறது.
“முன்பு நான்கு இலக்க எண்கள் ஹால்மார்க் அடையாளமாக பயன்படுத்தப்பட்டன. தற்போது நான்கு மற்றும் ஆறு இலக்க எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு ஆறு இலக்க முத்திரை மட்டுமே அனுமதிக்கப்படும்,” என்று திரு காரே தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த அறி விப்பு நகைக் கடைகளுக்கு மட்டுமே பொருந்தும். வீட்டில் ஏற்கெனவே உள்ள நகைகளுக்கு இது பொருந்தாது. மக்கள் தங்கள் நகைகளை வழக்கம்போல விற்பனை செய்ய முடியும்.