சிங்கப்பூரில் மொத்த வேலைவாய்ப்பு நிலவரம் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்திய நிலைக்குத் திரும்பியுள்ளபோதிலும் சென்ற ஆண்டின் கடைசி காலாண்டில் ஆட்குறைப்பு இரட்டிப்பானது.
கடந்த 2022 அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை 2,990 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். அதற்கு முந்திய காலாண்டில், அதாவது 2022 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் 1,300 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
மின்னணுக் கருவிகள் தயாரிப்பு (670), மொத்த விற்பனை (450), தகவல் தொடர்பு (370) ஆகிய துறைகளில் அதிகமான ஆட்குறைப்பு இடம்பெற்றது.
முதல் பாதியைவிட 2022ன் இரண்டாம் பாதியில் அதிகமானோர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு நிறுவன மறுசீரமைப்பு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டில் மொத்தம் 6,440 பேர் ஆட்குறைப்புக்கு ஆளாகினர்.
கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முந்திய 2018, 2019ஆம் ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளை உள்ளடக்கிய ஆட்குறைப்பு செய்யப்பட்ட குடிமக்களில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் விகிதம், நான்காம் காலாண்டில் 73.1 விழுக்காடு உயர்ந்தது. இது 2015ன் இரண்டாம் காலாண்டுக்குப் பிறகு மிக அதிகமாகும்.
சென்ற ஆண்டு சிங்கப்பூரில் மொத்த வேலைவாய்ப்பு 227,800 ஆக உயர்ந்துள்ளது. 1991ல் உயரத் தொடங்கிய வேலைவாய்ப்பு விகிதங்களுடன் ஒப்பிட, இது மிகக் கூடிய வளர்ச்சியாகும். 2007ல் 223,500 ஆக வளர்ச்சி கண்ட சாதனை அளவைவிட அதிகம்.
மொத்த வேலை வாய்ப்பு கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தி 2019ஆம் ஆண்டு நிலையைவிட 2.9% அதிகம் என்று மனிதவள அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
அத்துடன், 2022ல் குடிமக்களின் வேலைவாய்ப்பு 26,300 ஆக உயர்ந்து தொடர்ந்து விரி வடைந்து வருவதாகவும் அறிக்கை சுட்டியது. இந்த உயர்வு 2019இல் இருந்ததைவிட அதிகமாகும். பெரும்பாலும் நிதிச் சேவைகள், தகவல் தொடர்பு போன்ற துறைகளில் இந்த வேலை வாய்ப்புகள் இடம்பெற்றுள்ளன.
சென்ற 2019இன் நிலையை எட்டவில்லை என்றாலும், 201,600 ஆக உள்ள மொத்த வேலைவாய்ப்பு வளர்ச்சியின் பெரும்பகுதிக்கு குடியுரிமை இல்லாதோரின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை பங்களித்தது.
2022 ஏப்ரலில் எல்லைக் கட்டுப்பாடுகள் கணிசமாக தளர்த்தப்பட்ட பிறகு, கட்டுமானம், உற்பத்தித் துறைகளில் ஒர்க் பர்மிட் வைத்திருப்பவர்களுக்கான பணியிடங்களை முதலாளிகள் நிரப்பத் தொடங்கியது இதற்குக் காரணம் என்று மனிதவள அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
2021உடன் ஒப்பிட 2022இல் வேலையின்மை விகிதம் மேம்பட்டது, குடிமக்களின் வேலையின்மை எண்ணிக்கை 3.5 விழுக்காட்டிலிருந்து 2.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
சிங்கப்பூர்வாசிகளின் வேலையின்மை விகிதம் 3.7 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, மொத்த ஊழியரணியில் 2021ல் 2.7 விழுக்காடாக இருந்த வேலையின்மை விகிதம் சென்ற ஆண்டு 2.1 விழுக்காடாகக் குறைந்தது.
இதன்மூலம், மூன்று பிரிவுகளிலும் வேலையின்மை விகிதம் 2018, 2019 ஆண்டுகளின் சராசரியைவிட குறைந்துள்ளதாக அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, 2022ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் காலி இடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது காலாண்டாகக் குறைந்தது. எனினும் காலி இடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து 104,500 ஆக உயர்ந்திருந்தது.
வெளிநாட்டுத் ஊழியர்களுக்கான காலியிடங்களை நிரப்புதல், தொழில்நுட்பம், நிதிச் சேவைகளில் உள்ளூர்வாசி களின் வேலைவாய்ப்பு வளர்ச்சி ஆக யவை 2022ஆம் ஆண்டில் காணப்பட்ட வலுவான மீட்சிக்கு இரண்டு காரணிகளாகும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
டிசம்பர் 2022இல் பணியமர்த்தல் தொடர்பான உணர்வுகள் நேர்மறையானதாக இருந்தாலும், மெதுவான பொருளியல் வளர்ச்சி, ஊழியர் தேவையைப் பாதிக்கலாம், என்றார் அவர். "எனவே, வரவிருக்கும் காலாண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. மேலும் இது பல்வேறு துறைகளில் சீரற்றதாக இருக்கும்," என அவர் சொன்னார்.

