சிங்கப்பூரில் இருந்து இறைதரிசனத்திற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்றபோது விபத்தில் சிக்கி மாண்ட சிங்கப்பூர்த் தம்பதியரின் சடலங்கள் சடலங்கள் நேற்று சிங்கப்பூர் வந்துசேர்ந்தன.
அவர்களின் இறுதிச் சடங்கு புளோக் 633 ஹவ்காங் அவென்யூ 8ல் இன்று மாலை இடம்பெறுகிறது. பின்னர் அவர்களின் உடல்கள் மண்டாய் தகனச்சாலைக்கு எடுத்துச்சென்று எரியூட்டப்படும் என்று உறவினர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
மார்ச் 12ஆம் தேதி, யுவராஜன் செல்வமும் அவருடைய மனைவி நாகஜோதி வரதராசும் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மாண்டனர். அவர்களுடன் பயணம் செய்த ஓட்டுநரும் மாண்டார். இத்தம்பதியர் 40களில் இருப்பர் என்று உறவினர்கள் கூறினர்.
இந்த தம்பதியினர் விடுமுறைக்காக மார்ச் 8ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து இந்தியா சென்றனர்.
மற்ற குடும்ப உறுப்பினர்களும் மார்ச் 13ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து கிளம்பி அவர்களுடன் இணையத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் மார்ச் 12 அன்று, தம்பதியர் இந்தியாவில் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக குடும்ப உறுப்பினர்களுக்கு அன்று பிற்பகல் 3 மணி அளவில் தொலைபேசி அழைப்பு வந்தது.
தம்பதியின் மகனிடம் பெற்றோரின் மரணச் செய்தியைச் சொல்ல வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
கட்டுமான மேலாளரான திரு யுவராஜனும் ஆசிரியையான திருவாட்டி நாகஜோதியும் சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வாடகை காரில் திருப்பதிக்குக் கிளம்பினர்.
உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி காலை 11 மணியளவில்), ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, எண்ணெய்க் கொள்கலன் லாரி ஒன்று அதன்மீது மோதியது. சாலையில் இருந்து கார் வயல்வெளியில் சென்று விழுந்தது. இதில் தம்பதியும் ஓட்டுநரும் நிகழ்விடத்திலேயே மாண்டுபோனதாக 'ஏஎன்ஐ' செய்தி தெரிவித்தது.
இவ்விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றது காவல்துறை. பின்னர் உள்ளூர்வாசிகளின் துணையுடன் காவல்துறையினர் காரிலிருந்து அவர்களின் உடல்களை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை எண்ணெய்க் கொள்கலன் லாரி ஓட்டுநரைக் கைதுசெய்து விசாரித்து வருகிறது.
குடும்ப உறுப்பினர்கள் ஞாயிறு இரவு சென்னை சென்றனர். அதிகாரிகளின் உதவியுடன் உடல்களை மீட்டு சிங்கப்பூருக்கு எடுத்து வந்தனர்.

