சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் பற்பல புதிய அம்சங்களில் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையில் எரிசக்தி, சுகாதாரம், மனிதவள மூலதன மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களில் வரிசையாக உடன்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் திரு லீ இவ்வாறு கூறியுள்ளார்.
"எங்களது இருதரப்பு உறவுகள் உன்னதநிலையில் உள்ளன. முன்னேற்றத்தை நோக்கிய, பலதரப்பட்ட அம்சங்களில் வலுவான ஒத்துழைப்பை வழங்க நாங்கள் ஆயத்தமாக உள்ளோம். வருங்காலத் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளோம்," என்று பிரதமர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர்-இந்தோனீசியத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பில் பங்கேற்ற திரு லீ, அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் பேச்சு நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை பறைசாற்றும் வகையில் இஸ்தானா மாளிகையில் சிங்கப்பூர் ராணுவப் படையின் இசை முழக்கத்துடன் திரு விடோடோ வரவேற்கப்பட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்த வான்வெளி நிர்வாகம், தற்காப்பில் ஒத்துழைப்பு மற்றும் தப்பி ஓடியவர்களை நாடுகடத்துதல் ஆகிய மூன்று விவகாரங்களுக்குத் தீர்வுகாணும் வகையில் இச்சந்திப்பு அமைந்தது.
மூன்று ஒப்பந்தங்களில் ஒன்றான வான்வெளி நிர்வாக ஒப்பந்தத்தின் அடுத்த கட்ட பணிகளை நிறைவு செய்வதற்கு இந்தோனீசியாவுடன் சேர்ந்து பணியாற்ற சிங்கப்பூர் ஆவலுடன் இருப்பதாக கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் லீ குறிப்பிட்டார்.
"வெற்றிகரமான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளைப் பிரதிபலிக்கின்றன. திறந்த, ஆக்ககரமான தொடர்புகளால் கணிசமான இருதரப்பு நன்மைகளை இருநாடுகளும் பெறலாம் என்பதையும் அவை காட்டுகின்றன," என்றார் திரு லீ.
இதற்கிடையே வான்வெளி நிர்வாக ஒப்பந்த ஏற்பாடுகளை அங்கீகரிக்குமாறு அனைத்துலக வான்வெளி நிர்வாகத்தைக் கண்காணிக்கும் அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பிடம் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் இணைந்து விண்ணப்பித்துள்ளன.
அந்த அமைப்பு ஒப்புக்கொண்டால் மூன்று ஒப்பந்தங்
களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த இரு நாடுகளும் ஒரு நாளைத் தேர்வு செய்யும்.
இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தோ னீசியாவின் பிந்தானில் திரு லீயும் திரு விடோடோவும் சந்தித்தபோது மூன்று உடன்பாடு
களிலும் இருநாடுகள் கையெழுத்திடுவதைப் பார்வையிட்டனர். நேற்றைய சந்திப்புக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட ஆறு ஒப்பந்தங்களும் எரிசக்தி, நீடித்த நிலைத்தன்மை, சுகாதாரம், மனிதவள மூலதன மேம்பாடு, மின்னிலக்கப் பொருளியல், பாதுகாப்பு பங்களிப்பு ஆகிய அம்சங்களைச் சார்ந்தன.
மேலும் இருநாடுகளின் பாதுகாப்பு பங்காளித்துவம் குறித்த ஒரு கூட்டு அறிவிப்பும் வர்த்தகங்களுக்கு இடையிலான சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் வியாழக்கிழமை நிகழ்வில் இடம்பெற்றன.
இரு நாட்டுத் தலைவர்களும் அமைச்சரவை உறுப்பினர்களுடன் சந்தித்தனர்.
திரு விடோடோவுடன் சேர்ந்து அவரின் அமைச்சர்களும் அமைச்சர்நிலை தகுதி பெற்ற பிரமுகர்களும் வந்திருந் தனர்.
அதேபோல திரு லீயுடன் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் ஆகியோர் வந்தனர்.
சந்திப்பில் ஆசிய வட்டாரம் பற்றி கலந்துரையாடப்பட்டது. அதில் இந்தோனீசியாவின் ஆசியான் தலைமைத்துவத்திற்கு சிங்கப்பூர் முழு ஆதரவு வழங்கும் என்று பிரதமர் லீ நம்பிக்கை அளித்தார்.
மியன்மார் சூழ்நிலை குறித்த ஆசியானின் ஐந்து அம்ச கருத்திணக்கத்தில் முன்னேற்றம் இல்லாதது நமக்கு வருத்தம் தருவதாகக் கூறிய திரு லீ, இந்தக் கருத்திணக்கம் முழுமையாகச் செயல்பட இந்தோனீசியா, ஆசியான் மற்றும் ஐநா மன்றத்துடன் சேர்ந்து சிங்கப்பூர் தொடர்ந்து பணிபுரியும் என்றார்.

