நிமோனியா காய்ச்சலை உருவாக்கும் 'ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே' நுண்ணுயிரிக்கு எதிரான புதிய தடுப்பூசியைத் தயாரித்துள்ளது 'ஃபைசர்' நிறுவனம். தற்போது பயன்பாட்டில் உள்ள இரண்டு வகைத் தடுப்பூசிகளைவிட இது கூடுதல் திறன்மிக்கது எனக் கூறப்படுகிறது.
புதிய 'பிசிவி20 நியூமோகாக்கல்' தடுப்பூசியைப் பெறும் முதல் ஆசிய நாடு சிங்கப்பூர்.
நுரையீரல் அழற்சியை ஏற்படுத்தும் நிமோனியா காய்ச்சல் மட்டுமன்றி, மூளைக்காய்ச்சல், சைனஸ் பிரச்சினை, காதின் நடுப்பகுதியில் உண்டாகும் தொற்று போன்றவை ஏற்படவும் இந்த நுண்ணுயிரிகள் காரணமாக இருக்கக்கூடும்.
இந்தப் பிரச்சினைகளால் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன் சில நேரங்களில் மரணம் ஏற்படவும் வாய்ப்புண்டு.
சிங்கப்பூரில் மரணம் ஏற்படுத்தும் நோய்களின் பட்டியலில் மூன்றாவது நிலையில் உள்ளது நிமோனியா காய்ச்சல்.
சிங்கப்பூரர்களான முதியோருக்கும் குழந்தைகளுக்கும் அரசாங்கம் குறைந்த விலையில் நிமோனியா தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள மானியம் வழங்குகிறது.
வேறு சில நுண்ணுயிரிகள், பூஞ்சை வகைகள் ஆகியவற்றாலும் நிமோனியா காய்ச்சல் ஏற்படக்கூடும். இருப்பினும் பொதுவாக 'ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே' நுண்ணுயிரியால்தான் அது அதிகமாக ஏற்படுகிறது.
தற்போதைய நடைமுறையின்கீழ், 'பிசிவி13' எனும் தடுப்பூசியை முதலில் போட்டுக்கொண்டு, ஓராண்டு கழித்து 'பிபிஎஸ்23' எனும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். புதிய தடுப்பூசி இவ்விரண்டுக்கும் மாற்றாக அமையும் என்று கருதப்படுகிறது.
'பிசிவி13' தடுப்பூசியைவிடக் கூடுதலாக ஏழு வகையான நுண்ணுயிரித் திரிபுகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது 'பிசிவி20'.

