ரச்சனா வேலாயுதம்
சிங்கப்பூர் தமிழ் வானொலி, மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முத்திரை பதித்த திரு ரெ.சோமசுந்தரம் நேற்று முன்தினம் மாலை 5.15 மணியளாவில் கூ டெக் புவாட் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 75.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக, ஏராளமான நாடகங்களை எழுதி, இயக்கி, இவர் நடித்துள்ளார்.
"தமிழ்மொழியையும் இலக்கியத்தையும் மக்களிடம் கொண்டுசெல்வதில் என் தந்தை தீவிரமாகச் செயல்பட்டார். சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார். வேலை இருந்தாலும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவிட முயற்சி செய்வார். அப்பாவின் மறைவு எங்கள் குடும்பத்திற்கும் கலையுலகத்திற்கும் பேரிழப்பு," என்றார் அவரது இளைய மகன் கார்த்திகேயன் சோமசுந்தரம்.
1979ல் முழுநேர வானொலிப் படைப்பாளராகப் பணியைத் தொடங்கிய திரு ரெ.சோ. தமது மொழி வளம், காந்தக் குரல் ஆகியவற்றால் குறுகிய காலத்தில் மக்களின் மனங்களைக் கவர்ந்தார்.
கதாபாத்திரத்துக்கு ஏற்ப குரலை மாற்றிப் பேசும் திறன்கொண்ட இவர், வானொலியில் ஒலிபரப்பப்பட்ட 64 அத்தியாயங்கள் கொண்ட மகாபாரதம் தொடரில் துரியோதனன் கதாபாத்திரத்துக்கு மெருகூட்டினார்.
நல்லதோர் வீணை, ரகசியம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தார். 2007ஆம் ஆண்டு பிரதான விழாவில் சிறந்த நடிகருக்கான விருதையும் 2016ல் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றார்.
தொடர்ந்து 14 ஆண்டுகளாக தேசிய தின அணிவகுப்பின்போது தமிழில் விளக்கவுரை ஆற்றினார். வானொலியில் 32 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகும் தமிழ்ச் சமுதாயத்திற்குத் தன் பங்கை தொடர்ந்து பங்களித்தார்.
சிங்கப்பூர் இந்தியக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர், தாம்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்த இவர், சிங்கப்பூரில் தமிழ் தழைப்பதற்கான பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார்.
சிறுவயதில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த இவர் பல சவால்களைக் கடந்து கலை உலகில் தாரகையாய் மின்னினார். இவரது வாழ்க்கைக் கதையை 2021ல் 'ரெ சோமா' எனும் நாடகமாக எஸ்பிளனேட் அரங்கில் படைத்தது 'அகம் தியேட்டர் லேப்'. "சிங்கப்பூர் நாடகத் துறைக்குக் கிடைத்த பொக்கிஷம் திரு சோமசுந்தரம். மேடை நாடகக் கலைக்கு உயிரூட்டியவர்களில் ஒருவர். நான் இயக்கிய நகைச்சுவை நாடகத்தில் அவரை அறிமுகப்படுத்தி நடிக்க வைத்தது மறக்க முடியாத அனுபவம்," என்றார் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளரும் தமிழ் வானொலியின் முன்னாள் மூத்த நிர்வாகத் தயாரிப்பாளருமான பி.கிருஷ்ணன், 91.
"தமிழ் வானொலியில் சேர்ந்தபோது எனக்கு வழிகாட்டியாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திரு ரெ. சோ. மிகவும் இனிமையானவர். நானும் அவரும் இணைந்து நேரடிக் காற்பந்தாட்ட வர்ணனைகள் செய்துள்ளோம். இராமாயணம் வானொலி நாடகத்தில் இராவணனாக அவரும் அனுமனாக நானும் நடித்ததை மறக்க முடியாது," என்கிறார் தமிழ் முரசின் இணை ஆசிரியர் வீ.பழனிச்சாமி.
"அவர் குரலில் கர்ஜனையும் இருக்கும்; சாந்தமும் நிலவும். நடிப்பில் கம்பீரமும் கனிவும் இருக்கும்," என்று உள்ளூர்க் கலைஞர் ச. வடிவழகன் புகழாரம் சூட்டினார்.
மனைவி சரோஜா, மகன்கள் சிவமுருகன், கார்த்திகேயன், மகள் புனிதம், மருமகன் கணேஷ், மருமகள் கார்த்திகா, நான்கு பேரக்குழந்தைகள் ஆகியோரை அவர் விட்டுச்சென்றுள்ளார்.
இன்று பிற்பகல் 4 மணிக்கு புளோக் 631 அங் மோ கியோ அவென்யூ 4, #06-942ல் அவரின் இறுதிச்சடங்கு இடம்பெறும். மாலை 6 மணிக்கு மண்டாய் தகனச் சாலைக்கு அவரது நல்லுடல் எடுத்துச்செல்லப்பட்டு, ஹால் மூன்றில் எரியூட்டப்படும் என்று குடும்பத்தினர் கூறினர்.

