நீதிமன்ற நடவடிக்கைகளின்போது பொய் கூறிய சம்பவம் விசாரணையின்கீழ் வந்ததற்குப் பிறகு திரு லீ சியன் யாங்கும் திருவாட்டி லீ சுவெட் ஃபெர்னும் தலைமறைவானதைத் தொடர்ந்து பொதுநலன் கருதி அவர்கள் தொடர்பான தகவல்களை காவல்துறை வெளியிட வேண்டி வந்ததாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வாறு தகவல் வெளியிட்டதில் எந்தவித பாரபட்சமும் இல்லை என்றும் அவர்கள் பொய் கூறியதை நீதிமன்றமும் ஒழுங்குமுறை நடுவர்மன்றமும் கண்டு
பிடித்ததால் இது அரசாங்கப் பதிவேடு தொடர்பான விவகாரம் என்றும் திரு சண்முகம் கூறினார்.
சிங்கப்பூரின் நிறுவனப் பிரதமர் திரு லீ குவான் இயூவின் உயிலைக் கையாள்வது தொடர்பாக திருவாட்டி லீ சுவெட் ஃபெர்ன் சத்திய பிரமாணத்தின் கீழ் பொய் கூறியது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்தத் தம்பதி காவல்துறை விசாரணையை எதிர்நோக்கியது.
இம்மாதம் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் அந்தத் தம்பதியின் பெயரை வெளியிட்டார். அது ஏன் என்றும் தம்பதி தொடர்பான விசாரணை பற்றி தகவல் வெளியிடப்பட்டது ஏன் என்று தெரிந்து கொள்ள விரும்புவதாக இரண்டு உறுப்பினர்கள் மன்றத்தில் எழுப்பிய கேள்களுக்கு திரு சண்முகம் நேற்றுப் பதிலளித்துப் பேசினார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய், இந்த விவகாரத்தில் காவல்துறை இரட்டைநிலையையைக் கடைப்பிடிக்கிறதா என்று வினவினார். 'கெப்பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின்' நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக ஊழியர்கள் ஆறு பேர் ஊழல் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டபோது அவர்களின் பெயர் வெளியிடப்படவில்லை என்று அவர் கூறினார்.
பதிலளித்த திரு சண்முகம், "விசாரணைக்கு உட்பட்டோரின் பெயர்களை சட்ட அமலாக்க அமைப்புகள் வெளியிடக் கூடாது என்பது பொதுவான கொள்கை. அவ்வாறு செய்வது அவசியம் என்று கருத ஏராளமான சூழ்நிலைகள் உள்ளன," என்றார்.
"கடந்த ஆண்டு ஆடம்பரப் பொருள்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு மோசடிக் குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வந்த பி ஜியாபெங், பான்சுக் சிரிவிபா ஆகியோர் சிங்கப்பூரிலிருந்து தப்பி ஓடினர்.
"பொதுமக்களில் சிலர் இதுபற்றி தெரிந்துகொள்ள விரும்பும் நிலையில், அந்த விசாரணை பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு காவல்துறை அறிவித்தது," என்றார் அமைச்சர்.
"அதேபோல கார்ல் லியூ என்பவர் தமது குடும்பத்தின் முன்னாள் பணிப்பெண் பார்தி லியானி சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையின்போது பொய்யான ஆதாரம் அளித்ததற்காக அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. அவரது சாட்சியத்தில் சந்தேகம் இருப்பதாக வெளியான தீர்ப்பைத் தொடர்ந்து அவர் விசாரிக்கப்பட்டார்.
"இந்த இரு உதாரணங்களும் திரு லீ மற்றும் திருவாட்டி லீக்குப் பொருந்தும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டி காவல்துறை தொடர்புகொண்டபோது இந்தத் தம்பதி தலைமறைவாகிவிட்டது," என்று திரு சண்முகம் விளக்கினார்.
விசாரணையில் இருப்போரின் பெயரை மூன்று சூழ்நிலைகளில் வெளியிடலாம் என்று கூறிய அவர், அவற்றைப் பட்டியலிட்டார்.
பல்வேறு குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட ஒருவர் விசாரிக்கப்படும் வேளையில் தப்பி ஓட முயலும்போது, விசாரணைக்கு ஆளாகி இருக்கும் ஒருவர், விவரங்களை அவரே வெளியிடும்போது, வழக்கு ஒன்றின் உண்மையை காவல்துறை தெளிவாக்கும்போது - என்று மூன்று வெவ்வேறு சூழ்நிலைகளில், விசாரிக்கப்படுபவரின் பெயரை காவல்துறை வெளியிடலாம் என்றார் திரு சண்முகம்.

