வருங்கால கொள்ளைநோயைச் சமாளிக்கும் வகையில் தனித்துவமான பொது சுகாதார மையம் ஒன்றை சிங்கப்பூர் நிறுவும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
நோய்க் கட்டுப்பாடு மற்றும் கொள்ளைநோய் நிர்வகிப்புத் திறன்களையும் நிபுணத்துவத்தையும் அந்த மையம் ஒருங்கிணைக்கும் என்றார் அவர்.
அத்துடன் கொள்ளைநோய் சமாளிப்புக்குத் தயாராகும் வகையில் தனித்துவமான முன்கூட்டித் திட்டமிடும் குழு ஒன்றும் அமைக்கப்படும் என்றும் திரு வோங் நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
"பொது சுகாதாரத்திற்கான இந்தத் தனித்துவ மையம் தொடர்பான திட்டங்களை சுகாதார அமைச்சர் ஓங் யி காங் விரைவில் விளக்குவார். இதர நாடுகள் அமைத்துள்ள நோய்க்கட்டுப்பாட்டு மையம் போல இது இருக்கும்," என்றார் திரு வோங்.
தனித்துவ பொது சுகாதார மையம் சிங்கப்பூர் அதன் பொது சுகாதாரத் திறன்களை காலப்போக்கில் வளர்த்துக்கொள்ள உதவும்.
அதேநேரம், அடுத்த சுற்று கொள்ளைநோயை சிறந்த முறையில் எதிர்கொள்ள தனித்துவ திட்டக் குழு நாட்டுக்கு உதவும்.
அடுத்தகட்ட நடவடிக்கைக்கும் நோய் சூழல் உருவாகும்போது அதனை நோக்கி அதிக ஆற்றலுடன் நடவடிக்கைகளைத் திருப்பிவிடுவதற்கும் குழு கைகொடுக்கும் என்று துணைப் பிரதமர் விளக்கினார்.
கொள்ளைநோயை சிங்கப்பூர் சமாளிப்பது தொடர்பாக இம்மாதம் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 92 பக்க வெள்ளை அறிக்கையையொட்டி அவரது இந்த அறிவிப்பு இடம்பெற்றது.
வருங்காலக் கொள்ளைநோயைச் சமாளிப்பதில் ஏற்பட்ட தவறுகளைக் களைந்து, வெற்றி கரமாகப் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் நாட்டை உருவாக்குவதற்கான திட்டங்களை அந்த அறிக்கை உள்ளடக்கி இருந்தது.
கொள்ளைநோயை சிங்கப்பூர் சமாளிப்பது தொடர்பான தீர்மானத்தின் மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று திரு வோங் பேசினார். அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங், உறுப்பினர்கள் உட்பட 22 பேர் நேற்று இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசினர்.
அப்போது அவர் கூறுகையில், "கொவிட்-19 கொள்ளைநோயுடன் வாழும் வகையில் நாம் இப்போது முழுமையாக மாறிவிட்டோம். கிருமி நம்மிடத்தில் இன்னும் உள்ளது. ஆயினும் அது தொடர்ந்து எவ்வாறு உருவெடுக்கும் என்று யாராலும் கணிக்க இயலாது.
"நிலைமை படிப்படியாக மாறுவதுபோல இப்போது தோன்றினாலும் நாம் நமது சமாளிப்புத் திறனை கொண்டிருக்க வேண்டும். அடுத்தகட்ட கிருமிப் போராட்டம் எப்போது உருவெடுத்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருத்தல் வேண்டும்," என்றார் அவர்.
"சிங்கப்பூர் ஒவ்வொரு முறையும் நெருக்கடியைச் சந்திக்கத் தயாராகும்போது முழுமையற்ற தகவலாகவே முதலில் இருக்கும். கொவிட்-19 எப்படி கணிக்க முடியாததாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் அதேநேரம் வேகமாகப் பரவக்கூடியதாகவும் இருந்ததோ அதைப்போலத்தான் ஒரு நெருக்கடி உருவாகும்."
"நாம் எதிர்நோக்கும் ஒவ்வொரு புதிய நோய்க்கிருமியும் அறியாத ஒன்றைக் கையாள்வதைப்போல இருக்கும். மேலும் பலதரப்பட்ட 'மோசமான நிகழ்வுகளுக்கு' தீர்வு காண்பது செலவுமிக்க ஒன்றாக இருக்கும் என்பதைத் தவிர்க்க இயலாது."
"கொள்ளைநோயைச் சமாளிக்க சிங்கப்பூர் $100 பில்லியன் மதிப்பிலான வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றியது. இறுதியாக, 2020 நிதி ஆண்டிலும் 2021 நிதி ஆண்டிலும் அந்தத் தொகையில் $72.3 பில்லியன் செலவிடப்பட்டது. அவ்வாறு செலவிட்டது விவேகமானதாகவும் மோசமான விளைவுகளைத் தவிர்க்கக்கூடியதாகவும் இருந்தது," என்றார் திரு வோங்.

