சிங்கப்பூரும் மலேசியாவும் தங்களின் ஒத்துழைப்பை இருதரப்புப் பலனுக்காக விரிவுபடுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்று மலேசியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் உருவான இந்த 58 ஆண்டுகளில் இருதரப்புத் தொடர்புகள் ஒவ்வோர் அம்சமாக வலுப்பெற்று வந்துள்ளதாக திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
அதிபர் ஹலிமா யாக்கோப்பைச் சிறப்பிக்கும் வகையில் மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகம்மது ஷா, அவரின் துணைவியார் அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகிய இருவரும் நேற்று ஏற்பாடு செய்திருந்த விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் திருவாட்டி ஹலிமா இதனைக் கூறினார்.
"பொருளியல், பாதுகாப்பு, மக்கள் என வெவ்வேறு கூறுகளில் கணிசமான, இருதரப்புக்கும் பலன்தரக்கூடிய ஒத்துழைப்பை நம் இரு நாடுகளும் அனுபவிக்க முடிகிறது," என்றார் அவர். கடந்த அக்டோபர் மாதம் சுல்தான் அப்துல்லா சிங்கப்பூருக்கு வருகை புரிந்திருந்ததை அடுத்து அதிபர் ஹலிமா மலேசியாவுக்குத் தமது அதிகாரபூர்வ வருகையை மேற்கொண்டுள்ளார். இன்றோடு இந்தப் பயணம் முடிவடைகிறது.
கொவிட்-19 கொள்ளைநோயால் மூடப்பட்டிருந்த சிங்கப்பூர், மலேசிய எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, ஏப்ரலில் ஓராண்டு ஆகவுள்ள நிலையில், மாதந்தோறும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் மலேசியாவுக்கு நிலச் சோதனைச்சாவடிகள் மூலம் பயணிப்பது உற்சாகமூட்டும் செய்தி என்றார் அவர்.
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் எம்ஆர்டி ரயில் இணைப்பு 2026ஆம் ஆண்டில் தயாராகும்போது ஏற்கெனவே அணுக்கமாக உள்ள சிங்கப்பூர், மலேசியாவுக்கு இடையே இணைப்பு மேலும் வலுவடையும் என்றார் திருவாட்டி ஹலிமா. கல்வி தொடர்பில் இருதரப்பு பங்காளித்துவத் திட்டங்களின் வழியாக இருநாட்டு இளையர்களும் ஒருவரோடு ஒருவர் பழகிக்கொள்வதை நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அதிபர் ஹலிமா.
உலக நிலவரம் மாற்றங்களும் சவால்களும் நிறைந்ததாக இருக்க, ஆசியானை நிறுவிய உறுப்பு நாடுகளான மலேசியாவும் சிங்கப்பூரும் தொடர்ந்து வட்டாரத்தை ஒன்றுபட்டதாகவும் நம்பிக்கையானதாகவும் வைத்திருக்க உதவ வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
திருவாட்டி ஹலிமாவின் கருத்துகளை ஆமோதித்த சுல்தான் அப்துல்லா, மின்னிலக்கப் பொருளியல், பசுமைப் பொருளியல், உணவுப் பாதுகாப்பு போன்ற புதிய அம்சங்கள் தொடர்பில் ஒத்துழைப்பு அதிகரிக்கக் கோரிக்கை விடுத்தார்.

