இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் கருத்துகளைக் கூறியதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கில் திரு ராகுல் குற்றவாளி என்று அறிவித்த குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றம், அதன் தொடர்பில் அவருக்கு ஈராண்டுச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிணையில் வெளிவந்துள்ள அவருக்கு மேல்முறையீடு செய்ய 30 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு திரு ராகுல், பிரதமரின் குடும்பப் பெயரான 'மோடி' என்பது குறித்து அவமதிக்கும் விதமாகப் பேசியதாக வழக்கு தொடுக்கப்பட்டது. குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி இந்த வழக்கைத் தொடுத்தார்.
கர்நாடக மாநிலம் கோலாரில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, "எப்படி எல்லாத் திருடர்களுக்கும் மோடி என்றே குடும்பப் பெயர் அமைந்துள்ளது?" என்று வினா எழுப்பினார்.
மோசடி வழக்குகளில் சிக்கி லண்டனுக்குத் தப்பிச் சென்ற வர்த்தகர்கள் நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோரைச் சுட்டும் விதமாக ராகுல் அவ்வாறு கூறினார்.
இருப்பினும், தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியை அவமதிக்கும் விதமாகவே ராகுல் இவ்வாறு சொன்னதாக பாரதிய ஜனதாக் கட்சியினர் குறைகூறுகின்றனர்.
நான்கு ஆண்டுகளாக இந்த கிரிமினல் அவதூறு வழக்கு நடைபெற்று வந்தது.
கடந்த அக்டோபர் 2021ல் ராகுல் இவ்வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் நேரடியாக வாக்குமூலம் அளித்தார்.
அதில், தாம் ஊழலை எடுத்துக்கூறும் விதமாகவே கருத்துரைத்ததாகவும் எந்த சமூகத்தினருக்கும் எதிராகப் பேசவில்லை என்றும் கூறினார்.
சென்ற வாரம் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்படும் என்றும் அவ்வேளையில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். அதன்படி ராகுல் நேற்று பலத்த பாதுகாப்புடன் சூரத் நீதிமன்றத்திற்கு நேரில் சென்றிருந்தார்.
தீர்ப்பு வெளிவந்த பிறகு திரு ராகுல் டுவிட்டரில், "எனது சமயம், உண்மை, அகிம்சை ஆகிய பண்புகளின் அடிப்படையிலானது. உண்மைதான் எனது கடவுள். அகிம்சை அதை அடைவதற்கான வழி," என்று குறிப்பிட்டு உள்ளார்.
அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா, "ஆட்சியில் இருப்போர் அச்சம் காரணமாக ராகுலின் குரலை நசுக்கப் பார்க்கிறார்கள். எனது சகோதரர் முன்னெப்போதும் அஞ்சியதில்லை. இனியும் அஞ்ச மாட்டார்.
"நாட்டு மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பார். உண்மையின் வலிமையும் கோடிக்கணக்கான இந்தியர்களின் அன்பும் அவருக்குத் துணை நிற்கும்," என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இவ்வேளையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலாது என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி சாராத அரசியல் தலைவர்களைத் தேர்தல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் சதித் திட்டம் தீட்டப்படுவதாகக் கூறிய அவர், காங்கிரஸ் கட்சியுடன் தங்களுக்குக் கருத்து வேற்றுமை இருந்தாலும் ராகுல் இவ்வாறு நடத்தப்படுவது சரியல்ல என்றார்.
வழக்கில் ராகுல் காந்தியின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர், "தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் குறைபாடுகள் உள்ளன. திரு காந்தி தம்மை அவமதித்துப் பேசியதாகப் பிரதமர் மோடி தான் புகார் அளித்திருக்க வேண்டும். பூர்ணேஷ் மோடி அல்ல," என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியை அவமதித்ததாகக் கூறப்படும் வழக்கில் தீர்ப்பு

