சிங்கப்பூரில் சென்ற மாதம் மூலாதாரப் பணவீக்க விகிதம் நிலையாகவே இருந்தது.
சேவைக் கட்டணங்களின் உயர்வு குறைவாகவே இருந்தபோதும் மின்கட்டணம், சில்லறை விற்பனை விலை ஆகியவை வெகுவாக அதிகரித்தது இதற்குக் காரணம்.
உலகளவில் வங்கித் துறையில் பெரிய அளவிலான குழப்பம் நிலவும் வேளையில், குறுகிய காலத்திற்குப் பணவீக்க விகித நிலைமை சற்றே மேம்படக்கூடும் என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆண்டு அடிப்படையில் 5.5 விழுக்காடு அதிகரித்திருந்த அந்த விகிதம் இவ்வாண்டு ஜனவரியிலும் 5.5 விழுக்காடாகவே பதிவானது.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு இதுவே ஆக அதிகமான மூலாதாரப் பணவீக்க விகிதம்.
முன்னதாக, சென்ற மாதம் சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்க விகிதம் 5.8 விழுக்காடாக இருக்கும் என்று பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்திருந்தனர். புளூம்பெர்க் நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர்.
மூலாதாரப் பயனீட்டாளர் விலை என்பது தனியார்ப் போக்குவரத்து, தங்குமிடக் கட்டணங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து சிங்கப்பூர்க் குடும்பங்களின் செலவுகளைத் துல்லியமாகக் காட்டுகிறது.
சென்ற ஆண்டு ஏறக்குறைய எட்டு மாதங்கள் தொடர்ந்து அதிகரித்த மூலாதாரப் பணவீக்க விகிதம், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலையாக இருந்தது. பின்னர் இவ்வாண்டு ஜனவரியில் இவ்விகிதம் அதிகரித்தது. ஜனவரி 2023ல் பொருள். சேவை வரி உயர்வு நடப்புக்கு வந்ததும் இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
ஒட்டுமொத்தப் பணவீக்க விகிதம் சென்ற மாதம் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரியில் 6.6 விழுக்காடாகப் பதிவான அது, சென்ற மாதம் 6.3 விழுக்காடு ஆனது. முன்னுரைக்கப்பட்ட 6.4 விழுக்காட்டை விட அது குறைவு.
தனியார் போக்குவரத்துப் பிரிவில் பணவீக்க விகிதம் குறைந்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் நேற்று இந்த விவரங்களை வெளியிட்டன.
இந்த ஆண்டு முழுவதற்குமான ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 5.5 விழுக்காடு முதல் 6.5 விழுக்காடு வரை இருக்கும் என்று அதிகாரபூர்வமாக முன்னுரைக்கப்பட்டுள்ளது. மூலாதாரப் பணவீக்க விகிதம் 3.5 முதல் 4.5 விழுக்காடு வரை இருக்கக்கூடும்.
இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பொருள், சேவை வரி ஏழு விழுக்காட்டில் இருந்து எட்டு விழுக்காடாக உயர்த்தப்பட்டதைக் கருத்தில்கொண்டு இந்த முன்னுரைப்புகள் வெளியிடப்பட்டன.
எதிர்வரும் காலாண்டுகளில் பணவீக்க விகிதம் விரைவாகக் குறையக்கூடும் என்கின்றனர் சில வல்லுநர்கள். கடன் வழங்குவதற்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்படுதல், குறுகிய கால வட்டி விகித உயர்வு ஆகியவற்றால் முதலீடுகளும் பயனீட்டாளர்கள் செலவு செய்வதும் பாதிக்கப்படும் என்பதை அவர்கள் சுட்டினர்.
அடுத்த மாதக் கூட்டத்தில் சிங்கப்பூர் நாணய ஆணையம் நாணயக் கொள்கையை மீண்டும் கடுமையாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சில வல்லுநர்கள், விமானப் பயணக் கட்டணங்கள் வெகுவாகக் குறைந்த நிலையிலும் சென்ற மாத மூலாதாரப் பணவீக்க விகிதம் நிலையாக இருந்தது வியப்பு அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விகிதம் ஆணையத்தின் முன்னுரைப்பைவிடக் குறைவாக இருப்பதால் இந்த ஆண்டு அந்நியச் செலாவணிக் கொள்கை மேலும் கடுமையாக்கப்படாது என்பது அவர்கள் கருத்து.
ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், சென்ற மாதம் மின்சாரம், எரிவாயு ஆகியவற்றுக்கான கட்டணங்கள் 0.6 விழுக்காடு அதிகரித்தன. சில்லறை விற்பனைத் துறையில் பணவீக்க விகிதம் 0.5 விழுக்காடு உயர்ந்தது.
தனியார்ப் போக்குவரத்துப் பிரிவில் பணவீக்க விகிதம் சென்ற மாதம் 2.3 விழுக்காடு குறைந்தது. கார்களின் விலை உயர்ந்ததும் பெட்ரோல் விலை குறைந்ததும் இதற்குக் காரணங்கள்.
சேவைத் துறையில் பணவீக்க விகிதம் சற்றே உயர்ந்ததாகவும் உணவுத் துறையில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

