பிலிப்பீன்சின் சிபு நகரில் இருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட சந்தேகத்தின்பேரில், நேற்று முன்தினம் இரவு அது மலேசியாவில் அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது.
சிபு பசிபிக் ஏர் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான 5ஜே547 விமானம், இரவு 10.20 மணியளவில் கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
நேற்று முன்தினம் இரவு 7.55 மணியளவில் சிபுவில் இருந்து புறப்பட்ட விமானம் நள்ளிரவுவாக்கில் சிங்கப்பூர் வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்தது.
அதில் பயணிகளும் விமானச் சிப்பந்திகளுமாக மொத்தம் 92 பேர் பயணம் செய்தனர்.
விமானத்தில் அப்போது ஏற்பட்ட குழப்பத்தைப் பதிவு செய்த பயணிகளில் ஒருவரான திருவாட்டி செலோன் டாமயோ, ‘ஒருவேளை ஏதேனும் நேர்ந்தால்’ என்ற தலைப்பில் இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்தார்.
“எனக்கு மிகவும் பயமாக இருந்தது. விமானச் சிப்பந்திகளும் பயணிகளும் அழுதுகொண்டிருந்தனர்,” என்று அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் சாபா மாநிலத் தீயணைப்பு, மீட்புத் துறையினர் முன்னெச்சரிக்கையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
ஆனால் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு விமான நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
மாற்று விமானம் மூலம் அவர்களை சிங்கப்பூருக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அது தெரிவித்தது.