வேலை வாய்ப்பு மீள்திறனை வலுப்படுத்த சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது. ஆனால் இந்த இலக்கை எட்ட சிங்கப்பூர் ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும், வேலைகளை அல்ல என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
வேலைகளைப் பாதுகாக்கும் அணுகுமுறையை சிங்கப்பூர் கடைப்பிடிக்கவில்லை என்றார் அவர். அவ்வாறு செய்தால் புதிய, மேலும் சிறந்த வேலைகள் உருவாக முடியாமல் போகக்கூடும் என்று திரு வோங் கூறினார்.
வேலை வாய்ப்பு மீள்திறன் தொடர்பான குடியிருப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வின் நிறைவு விழாவில் திரு வோங் நேற்று கலந்துகொண்டு பேசினார்.
இந்த நிகழ்வு ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் உள்ள வேலை வாய்ப்பு, வேலைத் திறன் பயிற்சிக் கழகத்தின் வாழ்க்கைத் தொழில் சேவைகள் மையத்தில் நடைபெற்றது.
நான்கு அமர்வுகளில் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலுக்குக் கொள்கை ஆய்வுக் கழகம் ஏற்பாடு செய்தது. இதற்கு நீ ஆன் கொங்சி நிதி வழங்கியது. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு நடத்தும் திட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்றார் திரு வோங்.
சிங்கப்பூர் போன்ற துடிப்புமிக்க பொருளியலைக் கொண்ட நாடுகளில் சில வேலைகள் வழக்கற்றுப் போகக்கூடும். எனவே, ஊழியர்களைப் பாதுகாக்க அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் தகுந்த வேலைகளுடன் அவர்களை இணைப்பதிலும் கவனம் செலுத்தப்படும் என்று துணைப் பிரதமர் வோங் கூறினார்.
"ஒவ்வொரு சிங்கப்பூரரும் புதிய வேலைக்கு எளிதில் மாற, அவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும் அணுகுமுறை கையாளப்படும்," என்று திரு வோங் உறுதி அளித்தார்.
இதற்கு வேலைகளை உருவாக்கும் முதலாளிகளின் பங்கு அவசியம் என்றும் அவர்களை இதில் ஈடுபடச் செய்ய வேண்டும் என்றும் திரு வோங் வலியுறுத்தினார்.
திறன் இடைவெளியைக் குறைக்க முதலாளிகளுடனும் அந்தந்த தொழில்துறைகளுடனும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பவர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
பயிற்சிகளில் ஈடுபட்டு அவற்றை நிறைவு செய்யும் ஊழியர்கள், தேவை அதிகம் உள்ள திறன்களைக் கற்றுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று திரு வோங் கூறினார்.
தொழிற்சங்கங்கள் மூலமாகவும் நேரடியாகவும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் ஊழியர்களை ஈடுபடச் செய்வது மிகவும் முக்கியம் என்றார் திரு வோங்.

