ராகுல் காந்தி கடந்த வாரம் வெள்ளிக்
கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அந்த நடவடிக்கைக்குப் பின்பு நேற்று முதல்முறையாக நாடாளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கியதுமே, ராகுல் தகுதிநீக்கத்தைக் கண்டித்தும் அதானி விவகாரத்தை நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வலியுறுத்தியும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் ஓம் பிர்லாவை நோக்கி காகிதங்களைக் கிழித்து வீசி கடுமையாகக் கூச்சல் போட்டனர். அதனால், கூட்டம் தொடங்கிய ஒருசில நிமிடங்களிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை மாலை 4 மணி வரையும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டன.
அதனால், மன்ற வளாகத்தில் திரண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மகாத்மா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பெரும்பாலானோர், ராகுல் தகுதிநீக்கத்தைக் கண்டிக்கும் வகையில் கறுப்பு உடை அணிந்திருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் ராகுலின் தாயார் சோனியா காந்தியும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் போன்றவை உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாக செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டன.
முன்னதாக, காலை 10.30 மணியளவில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை எவ்வாறு காட்டுவது என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் 14 கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். திமுக சார்பில் அக்கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் டிஆர் பாலு, திருச்சி சிவா, தயாநிதி மாறன் ஆகியோரும் மதிமுக சார்பாக வைகோவும் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சியினர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்முறையாக திரிணாமூல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அக்கட்சி சார்பில் பிரசுன் பானர்ஜியும் ஜவஹர் சிர்காரும் கறுப்பு உடை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழக சட்டமன்றத்திற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கறுப்பு உடை அணிந்து வருகை தந்தனர். அப்போது ராகுலுக்கு ஆதரவாக இருப்போம் என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை ஏந்தியதுடன் பாஜகவுக்கு எதிரான முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று வாக்கு வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். விவாதம் முழுவதும் பேரவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கறுப்பு உடை அணிந்தும் வாயில் கறுப்புத் துணி கட்டியும் கண்களை கறுப்புத் துணியால் மறைத்தும் காங்கிரசார் பங்கேற்றனர்.
சென்னையில் 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசரும் கார்த்தி சிதம்பரமும் கலந்துகொண்டனர்.
தலைநகர் டெல்லியில் காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. அதனால், காந்தி நினைவிடத்துக்கு வெளியே நடைபெற்ற அறப்போராட்டத்தில் ராகுலின் சகோதரியான பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டார்.
ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒன்றுதிரண்ட 14 கட்சிகள்; போராட்டத்தில் அம்மா, சகோதரி

