பெலருஸில் அணு ஆயுதங்களைக் குவிக்கப்போவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவித்திருப்பதை நேட்டோ அமைப்பு 'ஆபத்தான, பொறுப்பற்ற' செயல் என குறைகூறியுள்ளது.
ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா தனது ஆயுதங்களைக் குவித்திருப்பதுபோல ரஷ்யாவும் ரஷ்ய-உக்ரேன் எல்லையிலுள்ள பெலருஸில் 'போர்த் தந்திர அணுவாயுதங்களை' நிலைநிறுத்தத் திட்டமிடுவதாக சனிக்கிழமை திரு புட்டின் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், அணு ஆயுதப் பரவல் தடைக்கான உடன்பாடு தொடர்பாக தான் ஏற்கெனவே அளித்த வாக்குறுதி எதனையும் ரஷ்யா மீறாது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது நட்பு நாடுகளில் அணு ஆயுதங் களை நிலைநிறுத்தி வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
உக்ரேன் மீது 13 மாதங்களுக்கு முன்னர் படையெடுக்கத் தொடங்கிய ரஷ்யா, அணு ஆயுதம் தொடர்பாக இதற்கு முன்னரும் பேசியிருந்தாலும் பெலருஸில் ஆயுதங்களைக் குவிப்பதாக அறிவித்திருப்பது எதிர்பாராத ஒன்று.
அவரது இந்த அறிவிப்பு உக்ரேனுக்கும் அதனை ஆதரிக்கும் நேட்டோ படைகள் மற்றும் ஐரோப்பாவுக்கும் திரு புட்டின் மறைமுக எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியானதும் ஐநா பாதுகாப்பு மன்றத்தின் அவசரக் கூட்டத்தை நடத்த உக்ரேனின் வெளியுறவு அமைச்சு வேண்டுகோள் விடுத்தது. ரஷ்யாவின் அணுவாயுதப் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்த அனைத்துலக சமூகம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அது கூறியது.
ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவுக்கு உடனடியாக தனது கண்டனத்தை ஒருமித்த குரலில் தெரிவித்தது.
இருப்பினும், அவரது இந்த அறிவிப்புக்கு உடனடியாக, எச்சரிக்கையுடன் கருத்துத் தெரிவித்த அமெரிக்கா, அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துவது தொடர்பான அறிகுறிகள் தென்படவில்லை என்றது.
இந்நிலையில், நேட்டோ அமைப்பின் பேச்சாளர் திருவாட்டி ஓவானா லுங்கெஸ்கு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார்.
அதில் அவர், "ரஷ்யாவின் அறிவிப்பு பொறுப்பற்றது; ஆபத்தானதும்கூட. ரஷ்யா தனது அணுசக்தி நிலைப்பாட்டில் தன்னைத்தானே சரிசெய்வதற்கான எந்தவொரு மாற்றத்தையும் மேற்கத்திய நாடுகள் இதுவரை காணவில்லை. ரஷ்யா ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான தனது கடப்பாடுகளை தொடர்ந்து மீறி வருகிறது," என்று குறிப்பிட்டார்.

