தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடரும் என்று மியன்மார் ராணுவ ஆட்சி மன்றத் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹிலெய்ங் கூறியுள்ளார்.
அதேவேளையில் தேர்தல் நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தலை நடத்தப் போதுமான பகுதிகள் தங்கள்வசம் இல்லை என்று மியன்மார் ராணுவம் சில வாரங்களுக்கு முன்புதான் கூறியிருந்தது.
திருவாட்டி ஆங் சான் சூச்சியின் தலைமையில் செயல்பட்ட ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை 2021ல் அந்நாட்டு ராணுவம் கவிழ்த்தது. அதிலிருந்தே மியன்மாரில் நிலையற்ற சூழல் இருந்து வருகிறது.
திருவாட்டி சூச்சி தேர்தல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
எனினும், அவர் அச்செயலில் ஈடுபட்டதற்குப் போதுமான ஆதாரம் இல்லை.
திரு வாட்டி சூச்சியின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து மியன்மாரில் மீண்டும் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்நிலையில், வருடாந்திர ஆயுதப்படை தினமான நேற்று 8,000 படைவீரர்கள் முன்னிலையில் உரையாற்றிய ஆட்சிமன்றத் தலைவர், எதிர்த்தரப்பினருக்கும் அவர்களை ஆதரிக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராக 'கடுமையான நடவடிக்கை' எடுக்கப்படும் என்றார்.

