‘டிரான்ஸிட்லிங்க்’, ‘ஈஸிலிங்க்’ கைப்பேசிச் செயலிகள் பயன்பாடு குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம்
‘டிரான்ஸிட்லிங்க்’, ‘ஈஸிலிங்க்’ ஆகிய கைத்தொலைபேசிச் செயலிகளைப் பயன்படுத்தும் பயணிகள் விரைவில் எளிதான முறையில் பயணக் கட்டணங்களைச் செலுத்த இயலும். இரு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு இதனைச் சாத்தியமாக்கும்.
நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று இந்தத் தகவலை வெளியிட்டது.
ஆணையத்தின் துணை நிறுவனங்களான ‘டிரான்ஸிட்லிங்க்’, ‘ஈஸிலிங்க்’ இரண்டும் அவற்றின் பயணக் கட்டணமுறை, பயண அட்டை தொடர்பான சேவைகள் போன்றவற்றை ஒருங்கிணைக்கவிருக்கின்றன.
ஒருங்கிணைந்த புதிய செயலி இந்த ஆண்டின் பிற்பாதியில் சேவை வழங்கத் தொடங்கும். படிப்படியாக அடுத்த ஆண்டின் பிற்பாதியில் இரு நிறுவனங்களும் இணைந்து ஒரே நிறுவனமாகச் செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பயணிகள் தற்போது ‘ஈஸிலிங்க்’ அட்டைகளை ‘ஈஸிலிங்க்’, ‘டிரான்ஸிட்லிங்க்’ இரண்டின் மூலமும் வாங்க இயலும். ஆனால் அட்டையின் செயல்பாட்டை நிறுத்துதல், தொகை தீரும் நிலையில் தானாகவே அதை நிரப்புதல் போன்ற சில நடைமுறைகள் ‘ஈஸிலிங்க்’ செயலியின் வழியாக மட்டுமே செய்ய முடியும்.
இரு செயலிகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் பயணிகள் ஒரே செயலியைப் பயன்படுத்தி பயண அட்டை தொடர்பான அனைத்துச் சேவைகளையும் பெற இயலும் என்பதை ஆணையம் சுட்டியது.
ஒருங்கிணைப்பு தொடர்பான திட்டங்கள் நிறைவுற்றதும் இதுகுறித்த மேல்விவரங்கள் வெளியிடப்படும் என்று அது குறிப்பிட்டது. அதுவரை பயணிகள் இப்போது பயன்பாட்டில் உள்ள இரு கைத்தொலைபேசி செயலிகளையும் தொடர்ந்து பயன்படுத்தலாம். அவர்கள் கட்டணம் செலுத்தும் முறையிலும் மாற்றம் இருக்காது என்று ஆணையம் கூறியது.
தற்போதைய நிலவரப்படி, ‘டிரான்ஸிட்லிங்க் சிம்ப்ளிகோ’ செயலியை 830,000 பேர் பயன்படுத்துகின்றனர். ‘ஈஸிலிங்க்’ செயலியை 1.9 பேர் பதிவுசெய்து பயன்படுத்துகின்றனர்.
நிலப் போக்குவரத்து ஆணையம், அதன் துணை நிறுவனங்களை முன்னர் இருவேறு காரணங்களுக்காக நிறுவியது. ‘டிரான்ஸிட்லிங்க்’ நிறுவனத்தை, பொதுப் போக்குவரத்துக்கான பயணச் சீட்டுகள், கட்டணமுறை ஆகியவற்றுக்காக 1987ஆம் ஆண்டில் நிறுவியது. பின்னர் 2002ஆம் ஆண்டு ‘ஈஸிலிங்க்’ பயண அட்டைகளின் விற்பனை, விநியோகம், நிர்வாகம் ஆகியவை தொடர்பில் ‘ஈஸிலிங்க்’ நிறுவனத்தைத் தொடங்கியது.
கடந்த 2019ஆம் ஆண்டு ‘சிம்ப்ளிகோ’ திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து இரு சேவைகளும் ஒரே வகையில் செயல்படுகின்றன. இருப்பினும் சில குறிப்பிட்ட நடைமுறைகள் அந்தந்த செயலியில் மட்டுமே பின்பற்றப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக மாணவர்களும் மூத்த குடிமக்களும் ‘டிரான்ஸிட்லிங்க் சிம்ப்ளிகோ’ செயலி மூலம் சலுகைக் கட்டண அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவற்றை ‘ஈஸிலிங்க்’ செயலி மூலம் மட்டுமே தடைசெய்ய இயலும்.
இரு செயலிகள் தொடர்பிலும் இருவேறு வாடிக்கையாளர் சேவைப் பிரிவுகளை அணுக வேண்டியுள்ளது.
துணை நிறுவனங்களின் ஒருங்கிணைப்புக்கு சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
ஒருங்கிணைப்பால் ஊழியர்கள் யாரும் வேலை இழக்கமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.