மலேசியாவில் கட்டாய மரண தண்டனையை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தொடங்கியுள்ளன. இதன் தொடர்பில் நேற்று இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கட்டாய மரண தண்டனை நீக்க மசோதா 2023, மரண தண்டனை, ஆயுள் தண்டனை இரண்டுக்குமான திருத்த மசோதா 2023 ஆகியவை அவை.
மலேசியப் பிரதமர் அலுவலகத்தில் சட்டம், நீதித்துறை மறுசீரமைப்பு ஆகிய துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் அஸலினா ஒத்மான் சையது, இரு மசோதாக்களையும் தாக்கல் செய்தார்.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும். கூட்டத் தொடரின் இறுதி நாளான அடுத்த மாதம் 4ஆம் தேதிக்குள் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனிமனித உயிரின் புனிதத்தை மதிக்கும் அதேவேளையில் அனைவருக்கும் நீதி, நியாயம் ஆகியவற்றை உறுதிசெய்வதே கட்டாய மரண தண்டனையை அகற்றுவதன் நோக்கம் என்றார் அமைச்சர்.
கொலை செய்யப்பட்டோர், போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கிக்கொண்டோர், இத்தகையோரின் குடும்பத்தினர் ஆகியோரை அவர் சுட்டினார். இரு மசோதாக்களும் சட்ட வடிவம் பெறும்போது அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றார் அவர்.
பரிந்துரைக்கப்படும் புதிய சட்டங்களின்கீழ், மரண தண்டனையை எதிர்நோக்கும் ஏறக்குறைய 1,300 பேர் தூக்குமேடையைத் தவிர்க்கும் வாய்ப்பைப் பெறக்கூடும்.
கட்டாய மரண தண்டனை அகற்றப்பட்டால், 90 நாள்களுக்குள் இவர்கள் தங்கள் தண்டனையை மறுஆய்வு செய்யும்படி மலேசிய கூட்டரசு நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்கலாம்.
இவர்கள் ஒருமுறை மட்டுமே இவ்வாறு விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் 90 நாள் காலவரம்பை நீட்டிக்கும் அதிகாரம் கூட்டரசு நீதிமன்றத்திற்கு உண்டு.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 840 பேர், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 25 பேர், மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருக்கும் 476 பேர் ஆகியோருக்குப் புதிய சட்டங்கள் தண்டனைக் குறைப்புக்கு உதவக்கூடும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சில வழக்குகளில் தண்டனைகளை மறுஆய்வு செய்து, 30 முதல் 40 ஆண்டு வரையிலான ஆயுள் தண்டனையாகவோ ஆறு முதல் 12 பிரம்படிகளாகவோ குறைக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு என்றார் அவர்.
மலேசியாவில் தற்போது கொலைக்குற்றம், பயங்கரவாதச் செயல், பிணை பிடிப்பு உள்ளிட்ட 11 வகையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இனி இவற்றில் மாற்றம் வரக்கூடும் என்றபோதும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரமும் நீதிமன்றத்திற்கு உண்டு.
போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் மரண தண்டனைக்குப் பதில் ஆயுள்தண்டனை விதிப்பது குறித்து முடிவெடுப்பதில் மலேசிய கூட்டரசு நீதிமன்றத்துக்கே கூடுதல் அதிகாரம் உண்டு.

