உலகளவில் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு நிகழ்ந்து வரும் நிலையில் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் தொழில்நுட்பத் திறனாளர் வேலைகள் அதிகமாகக் காலியாக உள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
காலி இடங்களை நிரப்ப இயலாமல் அத்தகைய நிறுவனங்கள் முயன்றுவருவதாகவும் அமைச்சின் வருடாந்திர 'காலி வேலையிட நிலவர அறிக்கை 2022' தெரிவிக்கிறது.
"பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடைபெறுவதாக செய்திகள் வெளியானாலும் இங்கு தொழில்நுட்பத் திறனாளர்களுக்கான தேவை உள்ளதை எங்களது ஆய்வு தெரிவிக்கிறது," என்று அமைச்சின் ஆய்வு மற்றும் புள்ளிவிவரத் துறை இயக்குநர் ஆங் பூன் ஹெங் தெரிவித்தார்.
சிறப்புத்திறன்மிக்க வேலைகளை நிரப்ப முதலாளிகள் அதிக சம்பளம் தரவும் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
சிங்கப்பூரில் காலியாக உள்ள 10 வேலைகளில் தொழில்நுட்ப வேலைகளும் உள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.
அலுவலக நிர்வாகி வேலைகளே காலியாக உள்ள வேலைகளில் பெரும்பான்மையாக உள்ளன. 2021ஆம் ஆண்டு இந்த இடத்தில் மென்பொருள் மற்றும் பல்லூடக திறனாளர் வேலை இருந்தது.
இவ்வாண்டு காலியாக உள்ள நிர்வாகிகளுக்கான வேலைகள் பெரும்பாலும் பொது நிர்வாகம் மற்றும் கல்வித்துறையில் இருப்பதாக அறிக்கை தெரிவித்தது.
ஒட்டுமொத்தமாக, காலியாக உள்ள வேலைகளின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக கடந்த டிசம்பர் மாதம் 104,500க்குக் குறைந்ததாகவும் அது கூறியது.
சிங்கப்பூர் வேலைச் சந்தையில் நிலவரம் மேம்பட்டு வருவதை இது காட்டுகிறது.
இருப்பினும், கொவிட்-19 கொள்ளைநோய்க்கு முன்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகம். அந்த மாதத்தில் காலியாக இருந்த வேலைகளின் எண்ணிக்கை 51,100.
2022ஆம் ஆண்டு முழுமைக்கும் காலியாக இருந்த வேலைகளின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வரை நிரப்பப்படாத வேலைகளின் எண்ணிக்கை 35 விழுக்காட்டிலிருந்து 27 விழுக்காட்டுக்குக் குறைந்தது.
எல்லைக் கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு நிர்வாக விதிகளும் விலக்கப்பட்டது அதற்குக் காரணம்.
நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) அல்லாத வேலைகளுக்கான காலியிடங்கள் குறைந்தன. இதுபோன்ற வேலைகளை வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்டு நிரப்ப முதலாளிகள் முயன்றது அதற்குக் காரணம்.
இனிவரும் காலங்களில் காலியாக உள்ள வேலைகளின் எண்ணிக்கை மிதமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் வேலைக்கு ஆள் எடுக்கும் போக்கு சாதகமானதாகத் தொடரும் என்றது அறிக்கை.
கடந்த ஆண்டில் தொழில்நுட்ப வேலைகளுக்கான தேவை அதிகரித்தது.
குறிப்பாக, மென்பொருள், இணையம் மற்றும் பல்லூடகத் திறனாளர்களுக்கு அதிக தேவை காணப்பட்டது. அலுவலக நிர்வாகி வேலைக்கு அடுத்த நிலையில் தொழில்நுட்ப வேலைகள் இருந்தன.

