இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் இந்தூர், பட்டேல் நகரில் உள்ள பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோயிலில் கிணறு மூடி இடிந்த விபத்தில் பலியான பக்தர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயம் அடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு நேற்று சென்ற அந்த மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
சம்பவம் பற்றி விசாரணை நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் யாராவது குற்றம் செய்திருந்தால் அவர்கள் தப்ப முடியாது என்றும் முதல்வர் தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா ரூ.5 லட்சம் இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பணமும் வழங்க மத்தியப் பிரதேச முதல்வர் உத்தரவிட்டார். அமைச்சர்களும் நேற்று சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
இதனிடையே, மாண்டவர்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தேவையான இதர உதவிகளும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்த கோயில் கிணற்றில் நேற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்தது.
பாலேஷ்வர் மகாதேவ் கோயிலில் இருக்கும் 40 அடி ஆழ பழமையான கிணறு கான்கிரீட் பாலங்களால் மூடப்பட்டு இருந்தது.
ராம நவமியை முன்னிட்டு கோயிலில் திரண்ட ஏராளமான பக்தர்களில் பலரும் அந்தப் பாலங்களின்மீது நின்றுகொண்டு இருந்தபோது எடை தாங்காமல் கான்கிரீட் மூடிகள் உடைந்தன.
பக்தர்கள் பலரும் கிணற்றுக்குள் விழுந்தனர். கிணற்றின் சுவரும் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளில் பலரும் சிக்கிக்கொண்டனர். அந்தத் துயர சம்பவத் தில் 35 பேர் மரணமடைந்துவிட்டனர். 14 பேர் மீட்கப்பட்டனர். டஜன் கணக்கான பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர்.
ஒருவரைக் காணவில்லை என்று கூறப்பட்டது. அவரின் உடலும் நேற்று மீட்கப்பட்டது. தேடி மீட்கும் பணி வியாழக்கிழமை நண்பகலில் தொடங்கி நேற்றும் தொடர்ந்தது என்று இந்தூர் மாவட்ட ஆட்சியர் டி.இளையராஜா தெரிவித்தார். மீட்புப் பணியில் ராணுவத்தினர் உள்ளிட்ட 75 பேர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

