பினாங்கு தீவு மாநகர் மன்றத்தின் அடுத்த மேயராகப் பொறுப்பேற்க இருக்கிறார் திரு ராஜேந்திரன் அந்தோனி, 60 (படம்).
மலேசிய வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மேயராக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை.
வரும் மே மாதம் 5ஆம் தேதி திரு ராஜேந்திரன் மேயராகப் பதவியேற்பார்.
"மலேசியாவில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மேயராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது," என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்தீப் சிங் டியோ கூறினார்.
"மலேசியாவில் மேயர் பதவி வகிக்கும் ஒரே இந்தியர் திரு ராஜேந்திரன்தான்," என்றும் அவர் சொன்னார்.
கடந்த 37 ஆண்டுகளாக பினாங்கு தீவு மாநகர் மன்றத்தில் பணியாற்றி வருகிறார் திரு ராஜேந்திரன்.
மாநகர் மன்றத்தின் முன்னைய பொறியியல் பிரிவு இயக்குநரான இவர், இப்போது அதன் செயலாளராக இருந்து வருகிறார்.
மேயராக நியமிக்கப்பட்டிருப்பது தமக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய கௌரவம் என்று இவர் குறிப்பிட்டார்.
ஓய்வுபெற்ற பிறகும் அரசாங்க சேவையில் தமது பணிக்காலத்தை நீட்டித்ததற்காக பினாங்கு மாநில அரசாங்கத்திற்கும் இவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
"பினாங்கு மக்களின், குறிப்பாக வசதி குறைந்தவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொதுப் போக்குவரத்து அமைப்பின் தரத்தையும் உயர்த்த விரும்புகிறேன்," என்றார் திரு ராஜேந்திரன்.

