உலகளாவிய வணிகம் பிளவுபடாமல் தொடர்ந்து இதே வேகத்தில் நடைபெற வேண்டுமெனில் புதிய அடிப்படை விதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் அறைகூவல் விடுத்துள்ளார்.
அமெரிக்கா-சீனா இடையிலான உத்திபூர்வ போட்டியும் மற்ற நாடுகள் அவ்விரு நாடுகளில் ஒன்றன் பக்கம் சாய்வதும் அதிகரித்து வரும் வேளையில் பிரதமர் லீ புதிய அடிப்படை விதிகளுக்கான தேவையை வலியுறுத்தியுள்ளார்.
எந்த ஒரு நாட்டையும் மிகுதியாகச் சார்ந்திருக்கக்கூடாது என்ற திரு லீ, உலக வணிக நிறுவனக் கட்டமைப்பின்கீழ் ஒன்றாக இணைந்து செயல்பட விரும்பும் நாடுகள் முன்னோக்கிச் செல்ல இன்னும் வழி இருப்பதாகத் தாம் நம்புவதாகவும் கூறினார்.
பிரதமர் லீயின் ஒரு வார சீனப் பயணம் நேற்றுடன் முடிவிற்கு வந்த நிலையில், சிங்கப்பூர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு சொன்னார்.
முன்னதாக, சீனப் பிரதமர் லி சியாங்கை நேற்றுக் காலை திரு லீ சந்தித்தார்.
அப்போது, சீனாவின் புதிய அரசாங்கம் குறிக்கோளுடன் கூடிய வரைவுத்திட்டத்தைச் செயல்படுத்த முனைப்பு காட்டிவரும் நிலையில், அது சிங்கப்பூருடன் இணைந்து செயலாற்றவும் நவீனமயம், வளர்ச்சி தொடர்பான பரிமாற்றங்களை முடுக்கிவிடவும் விரும்புகிறது என்று பிரதமரிடம் திரு லி கூறினார்.
'பிரதமர் லீ, சீன மக்களுக்கு நன்கு அறிமுகமான நீண்டகால நண்பர்' என்றார் அவர்.
சிங்கப்பூரும் சீனாவும் இருதரப்பு உறவை முன்னெடுத்துச் செல்ல மிக வலுவான அடிப்படையைக் கொண்டுள்ளன என்று பிரதமர் லீ தமது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.

