இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் தமது திருமணத்தின்போது மேல்நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவான மணப்பெண்ணைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மணமகனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த மணப்பெண், மாலை அணிவிப்பு சடங்கிற்குப் பிறகு வானை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுடுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
மணமகன் குழப்பத்தில் இருப்பதுபோல காணொளியில் தெரிந்தது.
அந்த மணப்பெண்ணின் உறவினர் ஒருவர், அக்காணொளியை எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிட்டது.
அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர், அப்பெண்ணிடம் துப்பாக்கியை வழங்குவது காணொளியில் தெரிந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான அந்த 23 வயது பெண்ணுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
தன்னை கைதுசெய்துவிடுவார்கள் என அஞ்சி, அப்பெண் தலைமறைவாகிவிட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.
இந்தியாவின் சில வடமாநிலங்களில் திருமணக் கொண்டாட்டங்களின்போது துப்பாக்கியால் வானை நோக்கிச் சுடுவது வழக்கமான ஒன்று.
ஆனால், கீழே விழும் துப்பாக்கித் தோட்டாக்களால் காயங்களும் சில வேளைகளில் மரணங்களும் ஏற்படுகின்றன.
இந்தியச் சட்டத்தின்கீழ், துப்பாக்கியைத் தவறாகப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
வானை நோக்கி துப்பாக்கியால் சுடுபவர் மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டாலும் விசாரணை நடத்தப்படும் என்று 2016ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

