இர்ஷாத் முஹம்மது
செய்தி ஆசிரியர்
பொருளியலுக்குச் சுமையாக அமையக்கூடிய அதிகரிக்கும் சுகாதாரப் பராமரிப்பு செலவுகள் போன்ற மூப்படையும் சமூகம் எதிர்நோக்கக்கூடிய கசப்பான உண்மையைத் தவிர்க்க, அனைவரும் நேர்மறையான சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார்.
வயதுவாரியான பல்வேறு பிரிவினரிடையே நிலவும் போட்டித்தன்மையால் சமூகத்தில் பிளவுகள் ஏற்படுவதையும் அவர் சுட்டினார்.
மூப்படைதலை ஆக்ககரமான நோக்குடன் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறிய பிரதமர், குடும்பத்தினர் வீட்டில் முதியோருடன் தொடர்பில் இருப்பதும் கலந்துறவாடுவதும் முக்கியம் என்றார்.
வேலையிடத்தில் முதலாளிகள் முதிய ஊழியர்களுக்கு ஆதரவு தந்து அவர்களது அனுபவங்களையும் திறமைகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
"முதியோருக்கு மரியாதை செலுத்தும் கலாசாரத்தை ஒரு சமுதாயமாக சிங்கப்பூர் வலுப்படுத்த வேண்டும்.
முதியோரைப் புரிந்துகொள்ளுதல், அவர்களின் முக்கியத்துவத்தை அறிதல், மனதைப் புண்படுத்தும் வகையில் அவர்களை வர்ணிப்பதைத் தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் இது சாத்தியமாகும்," என்றார் பிரதமர்.
'மூப்படையும் சிங்கப்பூர்: எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளும் சவால்களும்' எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நேற்று திரு லீ உரைஆற்றினார்.
இந்நிகழ்ச்சி, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஷா அறக்கட்டளை முன்னாள் மாணவர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் எஸ். வாசு, இணைப் பேராசிரியர்கள் பில்வீர் சிங், ஸ்ரீநிவாசன் சொக்கநாதன் மூவரும் இணைந்து இந்நூலைத் தொகுத்துள்ளனர்.
மூப்படைதலால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் களைய அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கும் மூன்று வழிகளைப் பிரதமர் தம் உரையில் கோடிட்டுக்காட்டினார்.
முதலாவது, மக்கள் தொகை நிலவரத்துக்கு ஏற்றவாறு ஓய்வுபெறும் வயதையும் மறுவேலைவாய்ப்புக்கான வயதையும் உயர்த்துவது. 2030ஆம் ஆண்டுக்குள் இவை முறையே 65 மற்றும் 70க்கு நீட்டிக்கப்படும்.
இரண்டாவது, ஓய்வுகாலத்திற்குப் போதுமான அளவு சேமிப்பு இருப்பதை உறுதி செய்வது. இதன் தொடர்பிலான மத்திய சேமநிதி மாற்றங்களைப் பிரதமர் விவரித்தார்.
மூன்றாவது, மூப்படையும் சமூகத்தின் அதிகரிக்கும் தேவைகளை ஈடுகட்டும் விதமாக, சுகாதாரப் பராமரிப்பு முறைகளை வலுப்படுத்துவது.
மூப்படையும் சமூகத்திற்காக இதுவரை சிங்கப்பூர் என்ன செய்துள்ளது, என்ன செய்துகொண்டிருக்கிறது, என்ன செய்யவேண்டும் என்பதை இந்த நூல் எடுத்துரைப்பதாக இதன் தொகுப்பாளர்களில் ஒருவரான டாக்டர் எஸ். வாசு குறிப்பிட்டார். நூலின் அச்சுப்பிரதியை $45க்கும் மின்னூலை $36க்கும் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

