வீடமைப்பு, திட்டமிடல் உத்திகள் குறித்த பெருந்திட்ட மறுஆய்வு
வீடமைப்பு, திட்டமிடல் ஆகியவற்றுக்கான சிங்கப்பூரின் உத்திகள் காலத்துக்கேற்றவாறு மக்களின் அக்கறைகளையும் விருப்பங்களையும் பிரதிபலிக்கும் வகையில் திருத்தி அமைக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியிருக்கிறார்.
அடுத்து வரையப்படவிருக்கும் பெருந்திட்டத்தில் இந்த அம்சங்கள் சேர்க்கப்படும் என்றார் அவர்.
பெருந்திட்டத்துக்கான மறுஆய்வு அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நடைபெறும். அதற்கடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கான நிலப் பயன்பாடு, மேம்பாட்டுத் திட்டங்களில் அதன் முடிவுகள் பயன்படுத்தப்படும்.
சிங்கப்பூரின் அடுத்த 50 ஆண்டுகளுக்கான மேம்பாட்டுத் திட்டத்தைவிடவும் அது விரிவாக இருக்கும் என்றார் அமைச்சர்.
அதிபரின் உரை தொடர்பான தமது அமைச்சின் பிற்சேர்க்கையில் திட்டங்களை விவரித்த திரு லீ, தற்போது சிங்கப்பூரில் 80 விழுக்காட்டினர் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிப்பதைச் சுட்டினார்.
நாடு வளர்ச்சியடையும் வேளையில், மூப்படையும் மக்கள்தொகை, மாறிவரும் சமூக வழக்கங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப பொது வீடமைப்புத் திட்டங்களும் அது தொடர்பான கொள்கைகளும் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார் திரு லீ.
ஒற்றையராகவும் பராமரிப்பாளர்களாகவும் வாழ்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இளைய சிங்கப்பூரர்களில் கூடுதலானோர் சுதந்திரமாக வாழ விரும்புகின்றனர் என்றார் அவர்.
"கழக வீடுகளும் குடியிருப்புப் பேட்டைகளும் பழையனவாகிவரும் நிலையில், முதிர்ச்சி அடையாத பேட்டைகளும் காலப்போக்கில் மேம்பாடு கண்டுள்ளன.
"சிங்கப்பூரில் வீடுகள் தொடர்ந்து கட்டுப்படியான விலையில் இருப்பதையும் வீடமைப்புப் பேட்டைகள் அனைவரையும் உள்ளடக்கியனவாகவும் ஒருங்கிணைப்பும் நீடித்த நிலைத்தன்மையும் பொருந்தியனவாகவும் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நாட்டின் வீடமைப்புக் கொள்கைகள் மாற்றியமைக்கப்படும்," என்று அமைச்சர் லீ குறிப்பிட்டார்.
முதன்முறை வீடு வாங்குவோருக்கும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் ஆதரவு தருவது உள்ளிட்ட தமது அமைச்சின் முன்னுரிமைகளை அவர் கோடிட்டுக் காட்டினார்.
ஒற்றையர், மூத்தோர், உடற்குறையுள்ளோர் போன்றோருக்கு வலுவான ஆதரவு தரும் வகையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அதன் குடியிருப்புப் பேட்டைகளைத் தொடர்ந்து மேம்படுத்தி, வீடமைப்பு தொடர்பில் அவர்களுக்கு வெவ்வேறு வாய்ப்புகளை வழங்கும் என்று திரு லீ கூறினார்.
மொத்தத்தில் ஒரு நாடாக சிங்கப்பூரின் முன்னுரிமைகள் குறித்தும் குறைவான வளங்களை அதிகரிக்கும் தேவைகளுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்வது குறித்தும் சிங்கப்பூரர்களின் கருத்திணக்கத்தை இந்தத் திட்டமிடல் பிரதிபலிக்கும் என்று அவர் சொன்னார்.
இவ்வேளையில், வருங்காலத் தலைமுறையினருக்குப் போதிய அளவில் நிலப்பரப்பையும் வளங்களையும் ஒதுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் நினைவுபடுத்தினார்.
கட்டுமானத் திட்டங்களில் ஏற்பட்ட தாமதம் குறித்துக் கருத்துரைத்த அமைச்சர், கொவிட்-19 கிருமிப் பரவல் பெரிய அளவில் இடையூறு ஏற்படுத்தியதைக் குறிப்பிட்டார்.
அதன் பிறகு நிலைமை தற்போது மேம்பட்டு வருவதை அவர் சுட்டினார்.
இந்த ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் கிட்டத்தட்ட 100,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொது வீடமைப்பு வீடுகளும் தனியார் வீடுகளும் இவற்றில் அடங்கும். இவற்றில் 40,000 வீடுகள் இந்த ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவைக்கேற்ப வீடுகள் கிடைப்பதையும் சொத்துச் சந்தையை நிலையாக வைத்திருப்பதையும் உறுதிசெய்யும் நடவடிக்கைகள் தொடரும் என்று அமைச்சர் லீ உறுதியளித்தார்.

