பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருக்கக்கூடும். அதுமட்டுமல்லாது, புவிசார் அரசியல் சூழல் மேலும் பிளவடையக்கூடும். இருப்பினும், நீடித்த நிலைத்தன்மை உள்ள பொருளியல் வளரச்சியை உறுதி செய்ய சிங்கப்பூர் தீவிரமாக முயற்சி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நாடாளுமன்றம் கூடியது. அதிபர் ஹலிமா யாக்கோப்பின் உரையின் பிற்சேர்க்கையாக இந்தக் கருத்துகளை வர்த்தக, தொழில் அமைச்சு சேர்த்துக்கொண்டது.
நாட்டின் பொருளியலை மேம்படுத்தவும் சிங்கப்பூரர்களுக்கு மேலும் பல வேலைகளை உருவாக்கவும் உலகளாவிய விநியோகச் சங்கிலி, சந்தைகள் ஆகியவற்றில் சிங்கப்பூர் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாகவும் அமைச்சு கூறியது.
வர்த்தகங்களுக்கு ஆதரவு வழங்கவும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் இந்த அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, நீடித்த நிலைத்தன்மை உள்ள பணவீக்கமற்ற பொருளியல் வளர்ச்சியை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியது.
ஆசியாவில் அனைத்துலக நிதி மையாக சிங்கப்பூர் வகிக்கும் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அது தெரிவித்தது.
அடுத்த சில மாதங்களில் தொடர்ந்து அதிகமாக இருக்கும் உலகளாவிய பணவீக்கம், உலகளாவிய தேவைகள் பலவீனம் அடைந்திருப்பது ஆகியவை சிங்கப்பூரின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.
இந்நிலையில், பொருளியல் வளர்ச்சிக்கும் வேலைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஏற்கெனவே இருக்கும் பொருளியல் நிலை, வேலைகளைப் பாதுகாக்கும் அணுகுமுறையை மற்ற நாடுகள் கடைப்பிடிக்கக்கூடும் என்று குறிப்பிட்ட திரு கான், சிங்கப்பூர் அதன் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் என்று கூறினார். உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் சிங்கப்பூரின் ஈடுபாடு மேலும் ஆழமானதாக இருக்கும் என்றார் அவர்.
"நாம் கடைப்பிடிக்கும் அணுகுமுறை உலகளாவிய வர்த்தக மையமாக சிங்கப்பூர் கொண்டுள்ள நிலையை வலுப்படுத்தும். சிங்கப்பூரில் உயர் மதிப்புள்ள பொருளியல் நடவடிக்கைகள் நங்கூரமிடப்படும். தரமுள்ள வேலைகள் உருவாக்கப்படும்.
"புதிய வாய்ப்புகளை நழுவவிடாமல் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள அனைத்துலகப் பங்காளிகளுடனான உறவுகளை சிங்கப்பூர் வலுப்படுத்திக்கொள்ளும்," என்றார் அமைச்சர் கான். முக்கியப் பங்காளிகளின் வர்த்தகச் சந்தைகளில் சிங்கப்பூரின் கூடுதல் ஈடுபாட்டை உறுதி செய்ய, எல்லை தாண்டிய கட்டணம் செலுத்தும் முறைக்கான இணைப்பை மேம்படுத்துவதில் மத்திய வங்கி தீவிரம் காட்டுவதாக ஆணையத்தின் தலைவரும் மூத்த அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் கூறினார்.
அதுமட்டுமல்லாது, புத்தாக்கமிக்க, பொறுப்புணர்வுமிக்க மின்னிலக்கக் கட்டமைப்பை ஆணையம் உருவாக்கும் என்றார் திரு தர்மன்.

