ஜப்பானில் விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து ஐந்து சடலங்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளதாக கியோடோ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த ஹெலிகாப்டரில் பத்துப் பேர் பயணம் செய்ததாகக் கூறப்பட்டது.
மூத்த அதிகாரியான லெஃப்டினென்ட் ஜெனரல் யுய்சி சகாமோடோவும் அவர்களில் ஒருவர்.
இம்மாதம் 6ஆம் தேதி, ஒக்கினாவாவில் உள்ள மியாகோ தீவின் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டர் ரேடார் கண்காணிப்புத் திரையிலிருந்து மறைந்தது.
மறுநாள் அதன் கதவு, உடைந்த சுழல் இறக்கை உள்ளிட்ட சில பாகங்களைக் கடலோரக் காவற்படையினர் கண்டு எடுத்தனர்.
நேற்று மீட்கப்பட்ட சடலங்கள் குறித்த மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை. விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
ஜப்பானிய ராணுவத்தில் எப்போதாவது இத்தகைய விபத்துகள் நிகழ்வதுண்டு.
சென்ற ஆண்டு ஜப்பானிய போர் விமானம் ஒன்று இஷிகாவா வட்டாரத்தில் கடலில் விழுந்ததில் அவ்விமானத்தின் விமானிகள் இருவரும் உயிரிழந்தனர்.
2019ஆம் ஆண்டு வடகிழக்கு ஜப்பானில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த எஃப்-35ஏ ரக போர் விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்தது. அதன் விமானி அவ்விபத்தில் உயிரிழந்தார்.

