சூடானில் மூன்று நாள்களாக ராணுவத்திற்கும் 'ஆர்எஸ்எஃப்' எனும் துணை ராணுவப்படைக் குழு ஒன்றிற்கும் இடையில் நடைபெறும் தீவிர மோதல்களில் ஏறத்தாழ 100 பேர் உயிரிழந்தனர். 1,100 பேர் காயமுற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தோரில் ஐக்கிய நாட்டு நிறுவன உலக உணவுத் திட்ட ஊழியர்கள் மூவரும் அடங்குவர்.
சண்டையிடும் இருதரப்பும் தலைநகர் கார்ட்டூமின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றுவதில் முனைந்துள்ளன.
வெடிப்புச் சத்தங்கள் காதைப் பிளப்பதாகக் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறிது நேரம் சண்டை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது.
காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்கு அவகாசம் தரும் நோக்கில் அவ்வாறு செய்யப்பட்டதாகச் சொன்னாலும் எந்த அளவிற்கு சண்டை நிறுத்தம் அமலில் இருந்தது என்று தெளிவான தகவல் இல்லை.
கார்ட்டூம் மருத்துவமனைகளில் நிலைமை மிகவும் கடினமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மோதல்களால் மருத்துவ ஊழியர்களும் மருத்துவப் பொருள்களும் காயமடைந்தோரைச் சென்றடைவதைத் தடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
நேற்றும் நேற்று முன்தினமும் கார்ட்டூம் நகரில் உள்ள அதிபர் மாளிகை, பக்கத்து நகரான ஓம்டமான், மேற்கில் டாஃபர், வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மெரோவி விமான நிலையம் ஆகியவற்றைக் கைப்பற்றியிருப்பதாக ஆர்எஸ்எஃப் கூறியது.
பின்னர் விமான நிலையம் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததாகக் கூறப்பட்டது.
ஆகாயத் தாக்குதலுக்குப் பிறகு ராணுவத்தின் கை ஓங்கிஇருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் சூடானில் உள்ள சிலர் கூறினர்.
கார்ட்டூம் குடியிருப்பாளர்கள் பீதியடைந்துள்ளனர். 24 மணி நேரத்துக்குமேல் தூங்கவில்லை என்றும் உணவு, தண்ணீர், மருந்துப் பொருள்கள் தட்டுப்பாடு நேரலாம் எனக் கவலைப்படுவதாகவும் அவர்கள் கூறியதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.
வன்செயல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி அனைத்துலகத் தரப்பினர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். அரேபிய நாடுகள், அமெரிக்கா, ஆப்பிரிக்க ஒன்றியம், எகிப்து, தெற்கு சூடான் போன்றவை சூடானில் மக்களாட்சியை மீண்டும் மலர வைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவு நல்குவதாக உறுதியளித்துள்ளன.

