கொவிட்-19 கொள்ளைநோய் பரவல் காரணமாக தாமதமடைந்த பிடிஓ திட்டங்களில் கிட்டத்தட்ட 63 விழுக்காட்டை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் முடித்துவிட்டது. தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று இதனை தமது ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
கடந்த ஈராண்டுகளில் முடிக்கப்பட்ட 58 பிடிஓ திட்டங்களை இது குறிக்கும். மேலும், கடந்த மாதம் நிறைவுபெற்ற சுவா சூ காங்கில் உள்ள கியட் ஹோங் வெர்ஜ் திட்டமும் இதனுள் அடங்கும்.
இந்தத் திட்டத்திற்கான காத்திருப்புக் காலம் கிட்டத்தட்ட ஈராண்டுகள் என்று தெரிவித்த திரு லீ, 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கொவிட்-19 முறியடிப்பு (சர்கிட் பிரேக்கர்) காலத்திலிருந்து தாமதமின்றி முடித்துத் தரப்பட்ட முதல் பிடிஓ திட்டம் இது என்றார்.
"மாதத்திற்கு சராசரியாக ஒன்று அல்லது இரண்டு வீவக பிடிஓ திட்டங்களே முடிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த (மார்ச்) மாதம் ஏழு திட்டங்கள் முடிக்கப்பட்டன.
"2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு மாதத்தில் ஆக அதிகமான பிடிஓ திட்டங்கள் முழுமைஅடைந்தது அந்த மாதத்தில்தான்," என்று திரு லீ குறிப்பிட்டார்.
வெற்றிகரமாக முடிக்கப்பட்ட மற்றொரு பிடிஓ திட்டம், உட்லண்ட்ஸில் உள்ள மார்சிலிங் குரோவ். முன்னாள் முதல்நிலை குத்தகையாளர் கிரேட்எர்த் நிறுவனம் கலைக்கப்பட்டதன் காரணமாக அந்தத் திட்டம் பாதிக்கப்பட்டது.
புக்கிட் பாத்தோக்கில் உள்ள ஸ்கை விஸ்டா, புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள செஞ்சா ஹைட்ஸ் மற்றும் செஞ்சா ரிட்ஜஸ், கிளமெண்டியில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் பார்க்வியூ ஆகிய திட்டங்களின் முதல்நிலை குத்தகையாளராக அந்நிறுவனம் இருந்தது.
அதிகமான நிறுவனப் பொறுப்புகள் காரணமாக இந்தத் திட்டங்களைத் தொடர இயலவில்லை என்று கிரேட்எர்த் அறிவித்ததன் காரணமாக அந்தத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் 2021ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டன.
"இவ்வாறு திடீரென்று கையை விரித்துவிட்டதால், நின்றுபோன திட்டங்களை எல்லாம் முடிப்பது அவ்வளவு எளிதல்ல.
"இருப்பினும், வீவகவின் சார்பு அமைப்புகளும் குத்தகையாளர்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் காரணமாக, அறிவிக்கப்பட்ட காலத்திலேயே கட்டுமானப் பணிகளை முடித்து வீடுகளை விநியோகித்தோம். அதேநேரம் தரத்திலோ பாதுகாப்பிலோ எவ்வித சமரசமும் காட்டப்படவில்லை.
"கிரேட்எர்த் விட்டுப்போன திட்டங்களில் எஞ்சியிருப்பது வெஸ்ட் கோஸ்ட் பார்க்வியூ மட்டும்தான். இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அது முடிக்கப்பட்டு வீடுகள் ஒப்படைக்கப்படும்," என்றார் திரு லீ.
தாமதமடைந்த வீடுகளின் விகிதம், கொவிட்-19 தடைகள் தணிந்ததாலும் வெளிநாட்டு ஊழியர் நிலவரம் மேம்பட்டதாலும் 2021ஆம் ஆண்டு குறையத் தொடங்கியதாக கடந்த பிப்ரவரியில் வீவக கூறியது.
2022ஆம் ஆண்டு 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு, அவற்றில் 17,000 வீடுகள் வீட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டன.
இந்த விகிதம் அதற்கு முந்திய ஆண்டைக்காட்டிலும் 15 விழுக்காடு அதிகம்.

