ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நேற்று தனது முதல் விற்பனை நிலையத்தை மும்பையில் திறந்தது.
ஏராளமானோர் முன்னிலையில் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இதனை நேற்றுக் காலை திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்த பலரும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் கால்பதித்து 25 ஆண்டுகள் ஆன நிலையில் அதனை நினைவுறுத்தும் வகையில் புதிய விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகை மாதுரி தீக்ஷித் உள்ளிட்ட பல திரையுலகப் பிரமுகர்களும் ஆப்பிள் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.
புதிய விற்பனை நிலையத்தில் ஆப்பிள் ஐஃபோன், ஆப்பிள் கைக்கடிகாரம் போன்றவற்றை வாங்க பலர் முதல் நாள் இரவிலிருந்தே வரிசையில் காத்திருந்தனர்.
அவர்களில் பலர், மறைந்த ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப் படம் பொறித்த டி-சட்டை அணிந்திருந்தனர். வேறு சிலர், ஆப்பிள் நிறுவன சின்னம்போல தங்களது தலைமுடியை திருத்தி இருந்தனர்.
ஆப்பிள் பொருள்களின் தயாரிப்பை சீனாவிலிருந்து மாற்றுவதற்கும் விற்பனையைச் சந்தைப்படுத்துவதற்கும் தென்கிழக்கு ஆசியாமீது ஆப்பிளின் கவனம் திரும்பி இருக்கிறது.

