தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆட்குறைப்பு அதிகரித்தது; வேலையின்மை குறைந்தது

2 mins read
34b9b93a-8750-4334-88d5-cacc05c7cec7
-

வேலை இல்லாதோர் எண்ணிக்கை 67,100லிருந்து 61,500க்கு இறங்கியது

சிங்­கப்­பூ­ரில் மொத்த வேலை வாய்ப்­பு­கள் கொவிட்-19க்கு முந்தைய நிலை­யை விஞ்சி அதி­க­ரித்து இருக்­கின்­றன.

அந்த அதி­க­ரிப்பு 3.9% ஆக இருக்­கிறது என்று முன் மதிப்­பீடு­கள் தெரி­விக்­கின்­றன. இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் ஆட்­கு­றைப்பு எண்­ணிக்கை சுமார் 4,000 ஆக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சென்ற ஆண்­டின் கடைசி காலாண்­டில் 2,990 பேர் ஆட்­கு­றைப்­புக்கு ஆளா­னார்­கள். மனி­த­வள அமைச்சு நேற்று 2023 முதல் காலாண்­டுக்­கு­ரிய தொழிலா­ளர் சந்தை புள்­ளி­விவரங்­கள் பற்­றிய முன்­னோட்ட அறிக்­கையை வெளி­யிட்­டது.

அதில் இந்­தக் கணிப்­பு­கள் இடம்­பெற்று இருக்­கின்­றன. ஆட்­கு­றைப்­பு­கள் அதி­க­ரித்­தா­லும் மார்ச் மாதம் வேலை­யின்மை விகி­தம் தொடர்ந்து குறை­வா­கவே இருந்­த­தாக அமைச்சு தெரி­வித்­தது.

சென்ற ஆண்­டின் கடைசி காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் வேலை­யின்மை விகி­தம் குறைந்து இருக்­கிறது.

சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­களை உள்­ள­டக்­கிய சிங்­கப்­பூர்­வா­சி­க­ளுக்­கான வேலை­யின்மை விகி­தம் 2022 டிசம்­ப­ரில் 2.8% ஆக இருந்­தது. அது இந்த ஆண்டு மார்ச்­சில் 2.5%ஆகக் குறைந்­து­விட்­டது.

வேலை­யில்­லா­மல் இருந்த சிங்­கப்­பூ­ரர்­க­ளின் விகி­தம் அதே கால­கட்­டத்­தில் 2.9%லிருந்து 2.7% ஆகக் குறைந்­தது.

இந்த ஆண்டு ஜன­வரி முதல் மார்ச் வரைப்­பட்ட மூன்று மாதத்­தில் வேலை­யின்றி இருந்த சிங்­கப்­பூர்­வா­சி­க­ளின் எண்­ணிக்கை 67,100லிருந்து 61,500 ஆகக் குறைந்து இருக்­கிறது. அவர்­களில் 54,900 பேர் குடி­மக்­கள்.

ஒட்­டு­மொத்த வேலை­யின்மை விகி­த­மும் குறைந்­துள்­ளது. மார்ச்­சில் மொத்த ஊழி­யர் அணி­யில் 1.8% ஆக வேலை­யின்மை விகி­தம் இருந்­தது. இந்த அளவு டிசம்­ப­ரில் 2% என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இத­னி­டையே, தான் நடத்­திய ஆய்­வில் கலந்­து­கொண்ட நிறு­வ­னங்­களில் பெரும்­பா­லா­னவை அடுத்த மூன்று மாதங்­களில் ஆட்­சேர்ப்­பு­களை அதி­க­ரிக்­கப் போவ­தா­கக் கூறி­யி­ருக்­கின்றன என அமைச்சு தெரி­வித்தது.

ஊழி­யர்­க­ளின் சம்­பளத்தை உயர்த்­த­வும் நிறு­வ­னங்­கள் திட்ட­மி­டு­கின்­றன. மார்ச் மாத நில­வ­ரப்­படி, ஆய்வில் கலந்து­கொண்ட நிறு­வ­னங்­களில் 38.2% நிறு­வ­னங்­கள் ஊழி­யர்­களுக்கு சம்­பளத்தை உயர்த்த திட்­ட­மி­டு­வ­தா­கத் தெரி­வித்­தன. இந்த விகி­தம் டிசம்­ப­ரில் 25.3% ஆக இருந்­தது.

முந்­தைய காலாண்­டு­க­ளைப் போலவே சிங்­கப்­பூர்­வா­சி­க­ளாக அல்­லா­த­வர்­க­ளின் வேலை நிய­ம­னங்­களே மொத்த வேலை வாய்ப்பு அதி­க­ரித்­த­தற்கு முக்­கிய கார­ண­மாக இருந்­தன.

இத­னி­டையே, இந்த நில­வரங்­கள் பற்றி சமூக ஊட­கத்­தில் கருத்துக் கூறிய தொழிற்­சங்­க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பேட்­ரிக் டே, வேலை­யின்மை விகி­தம் தொடர்ந்து குறை­வா­கவே இருக்­கும் என்­பதை­யும் வேலைவாய்ப்பு நில­வரங்­கள் ஆக்­க­க­ர­மா­ன­தாக இருக்­கும் என்­ப­தை­யும் சுட்­டி­னார்.

அதே­நே­ரத்­தில் உல­கப் பொரு­ளி­ய­லில் நிலவும் நிச்­ச­ய­மில்­லாத போக்­கு­க­ளை­யும் குறிப்­பிட்­ட அவர், உற்­பத்­தித்துறை­யில் நெருக்­க­டி­கள் தொடர்ந்து இருந்து வரும் என்று எதிர்­பார்ப்பதாகக் கூறி­னார்.

இந்த ஆண்­டின் இரண்­டா­வது காலாண்­டில் மின்­ன­ணுத் தொழில்­து­றை­யில் அத்­த­கைய நெருக்­கடி இருக்­க­லாம். அவற்­றின் தாக்­கங்­கள் தொடர்­பு­டைய இதர துறை­க­ளி­லும் தெரி­ய­வ­ர­லாம். இந்த ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் உற்­பத்­தித் தொழில்­துறை கொஞ்­சம் ஆக்­க­க­ர­மா­கத் திரும்­பும் என்­பதே நம்­பிக்கை என்­றா­ர­வர்.