அடுத்த ஐந்தாண்டுகளில் உலகில் 14 மில்லியன் வேலைகள் இல்லாமல் போய்விடும் என்று உலகப் பொருளியல் மன்றத்தின் 'எதிர்கால வேலைகள் 2023' ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இது, உலகின் இப்போதைய வேலைகளின் எண்ணிக்கையில் இரண்டு விழுக்காடு.
வரும் 2027ஆம் ஆண்டிற்குள் புதிதாக 69 மில்லியன் வேலைகள் உருவாக்கப்படும் என்றும் அதே நேரத்தில் 83 மில்லியன் வேலைகள் ஒழிந்துபோகும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
கிட்டத்தட்ட நான்கில் ஒரு வேலை, அதாவது 23 விழுக்காடு வேலைகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் உருமாற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், அவ்விகிதம் 22 விழுக்காடாக இருக்கும்.
தொழில்நுட்பமும் மின்னிலக்கமயமாதலுமே வேலை உருவாக்கத்திற்கும் அழிப்பிற்கும் முதன்மையான காரணிகளாகத் திகழும் என்று அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
வங்கிக் காசாளர்கள் போன்ற செயலக, எழுத்துப் பணிகள் விரைவில் தானியக்கமயமாக்கப்படும் என்றும் செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களுக்கான தேவை பெருகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நான்காவது முறையாக இடம்பெற்ற இந்தக் கருத்தாய்வில் மொத்தம் 803 நிறுவனங்கள் பங்குபெற்றன; 673 மில்லியன் வேலைகள் குறித்த தரவுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
பத்தில் ஆறு ஊழியர்களுக்கு 2027ஆம் ஆண்டிற்குள் பயிற்சி தேவைப்படும் என அறிக்கை கூறுகிறது. தங்கள் ஊழியர்களின் பயிற்சிக்காக 45 விழுக்காட்டு நிறுவனங்கள் நிதியுதவியை எதிர்பார்க்கின்றன.
7,800 வேலைகளுக்கு
ஆளெடுப்பு நிறுத்திவைப்பு
இதற்கிடையே, வரும் ஆண்டுகளில் 7,800 வேலைகளுக்கு ஆளெடுப்பது நிறுத்தப்படலாம் என்றும் அவ்வேலைகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் துணையுடன் மேற்கொள்ளப்படலாம் என்றும் எதிர்பார்ப்பதாக ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மனிதவளம் போன்ற அலுவலகப் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படும் அல்லது மெதுவடையும் என்று திரு கிருஷ்ணா கூறியதாக `புளூம்பெர்க்' செய்தி வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளரை நேரடியாகச் சந்திக்கத் தேவையிராத பணிகளில் 30 விழுக்காடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு, தானியக்கத் தொழில்நுட்பங்கள்வழி மேற்கொள்ளப்படும் என்றும் திரு கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார்.

