ஜோகூரில் கடந்த வாரம் மரணமடைந்த நான்கு வயது சிறுவன் தொடர்பாக அக்குழந்தையின் தாய்மீதும் வளர்ப்புத் தந்தைமீதும் துன்புறுத்தல் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
நாகேந்திரன், 23, ஏ.சங்கீதா, 23, ஆகிய இருவரும் நேற்று நீதிமன்றத்தில் அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
தாமான் ஸ்கூடாய் பாருவில் ஜாலான் அமானில் உள்ள ஸ்கூடாய் வில்லா அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏப்ரல் 28ஆம் தேதி நள்ளிரவில் குழந்தையை இவ்விருவரும் உடல் ரீதியாகக் கொடுமைப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விடிந்ததும் சுல்தானா அமினா மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை உயிரிழந்துவிட்டதாக காலை 8.20 மணியளவில் அறிவிக்கப்பட்டது. இஸ்கந்தார் புத்திரி காவல்துறைத் தலைவரும் துணை ஆணையருமான ரஹ்மத் அரிஃபின் இத்தகவலைக் கூறினார்.
குழந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அன்று பிற்பகல் 1 மணியளவில் தம்பதியர் இருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது குழந்தையின் தலை, வயிறு, கால்கள் மற்றும் காதுகளின் பின்புறத்தில் காயங்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட குழந்தையின் தாயான சங்கீதா தற்போது கர்ப்பிணியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் 20 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் 50,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம். அடுத்தகட்ட விசாரணை ஜூன் 7ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

