சிங்கப்பூரில் மறுசுழற்சியின் அளவைக் கூட்டுவதற்காக லிம் சூ காங் மறுசுழற்சி நிலையத்தை மேம்படுத்துவது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ அறிகிறது.
சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான மறுசுழற்சிக் கூடங்களின் மொத்த உருவமாக லிம் சூ காங்கின் சரிம்புன் மறுசுழற்சி நிலையம் திகழ்கிறது. இந்நிலையத்தை மறுமேம்பாடு செய்து அதிக நிலப் பகுதியை மறுசுழற்சிக்குப் பயன்படுத்தும் உத்தேசத் திட்டம் குறித்து ஆராய தேசிய சுற்றுப்புற வாரியம் ஏலக்குத்தகைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
30 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள சரிம்புன் மறுசுழற்சி நிலையம் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மறுசுழற்சிகளில் ஐந்தில் ஒரு பகுதியை கையாள்கிறது. கட்டுமானக் கழிவுகள், மரக்கழிவுகள், தோட்டக்கலையில் வீணாகும் பொருள்கள் ஆகியவற்றை இந்த நிலையம் மறுசுழற்சி செய்து பயனுள்ள பொருள்களை உருவாக்குகிறது.
சிங்கப்பூரின் இதரக் கழிவுகளை துவாஸ், ஜூரோங் மற்றும் சுங்கை காடுட்டில் அமைந்துள்ள வேறு சில மறுசுழற்சி நிலையங்கள் கையாள்கின்றன.
மறுசுழற்சி நடைமுறை என்பது பல்வேறு பணிகளை உள்ளடக்கியது. வெட்டி, நசுக்கி, உடைத்த பின்னர் அவற்றைச் சேமித்து வைக்க பெரிய அளவிலான இடம் தேவைப்படும். மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடமாக அது இருக்கக்கூடாது என்று வாரியத்தின் ஏலக்குத்தகை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மறுசுழற்சி நிலையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆராய விரும்புவதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் வாரியம் தெரிவித்தது.
இயன்றவரை கூடுதல் இடங்களை மறுசுழற்சிக்குப் பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்த அது விரும்புகிறது. பேரளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதையும் அதனுடன் இணைப்பது அதன் நோக்கம்.
மறுமேம்பாடு செய்யப்பட்ட நிலையம் 2029ஆம் ஆண்டு இறுதிவாக்கில் தயாராகிவிடும் என வாரியம் எதிர்பார்க்கிறது. இந்த நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வாரியம் ஏற்கும் நிலையில் அது சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடப்படும்.
உள்ளூர் மறுசுழற்சித் திறன்களை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் ‘சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030’ன்கீழ் தேசிய கழிவுக் குறைப்பு இலக்குகளை எட்டவும் இந்த மறுமேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், 2030ஆம் ஆண்டு வாக்கில் தேசிய மறுசுழற்சி விகிதத்தை 70 விழுக்காட்டுக்கு உயர்த்த வகுக்கப்பட்டு இருக்கும் ‘கழிவுகளற்ற பெருந்திட்டத்தின்’ ஒரு பகுதியாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
செமக்காவ் குப்பை நிரப்புமிடத்திற்கு அனுப்பப்படும் கழிவுகளை ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 30% என்ற விகிதத்தில் குறைக்கவும் வாரியம் எண்ணியுள்ளது.
சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மறுசுழற்சி 2021ஆம் ஆண்டைவிட 2022ல் இரண்டு விழுக்காடு அதிகரித்தது. அதாவது, 55 விழுக்காட்டில் இருந்து 57 விழுக்காட்டுக்கு அது கூடியது. கட்டுமானக் கழிவுகள் மற்றும் இடிக்கப்பட்ட பொருள்கள் கிட்டத்தட்ட 99% கடந்த ஆண்டு மறுசுழற்சி செய்யப்பட்டன.
அதேபோல துண்டிக்கப்பட்ட மரக்கிளைகள், அழகுபடுத்த வெட்டப்பட்ட செடிகளின் பாகங்கள் போன்ற தோட்டக்கலைப் பொருள்களில் 85 விழுக்காடு மறுசுழற்சி செய்யப்பட்டன.
பிளாஸ்டிக் பொருள்களின் மறுசுழற்சி அளவை அதிகரிப்பது குறித்தும் வாரியம் யோசித்து வருகிறது.
கடந்த ஆண்டு வெறும் 6 விழுக்காடு பிளாஸ்டிக் பொருள்கள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டன. எஞ்சிய 924,000 டன் பொருள்களும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.