குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்க சட்டத்திருத்தம்

3 mins read

குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­ப­டு­வோர், தங்­க­ளைத் துன்­புறுத்­து­வோ­ரி­ட­மி­ருந்து மேம்­பட்ட பாது­காப்­பைப் பெற முடி­யும்.

மாதர் சாசன (குடும்ப வன்­மு­றை­யும் மற்ற விவ­கா­ரங்­களும்) திருத்த மசோ­தா­வின்­கீழ் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள மாற்­றங்­களை நாடா­ளு­மன்­றம் ஏற்­றுக்­கொண்­டால் அது சாத்­தி­ய­மா­கும்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட அந்த ம­சோ­தா­வா­னது தனி­நபர் பாது­காப்பு ஆணை தொடர்­பில் மூன்று புதிய அம்­சங்­க­ளைச் சேர்க்­கும்.

குடும்ப உறுப்­பி­னர்­மீது ஒரு­வர் வன்­மு­றை­யைக் கையாள்­வ­தைத் தடுக்­கும் நீதி­மன்ற ஆணை­கள், பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் வீட்­டிற்கு வெளி­யே­யும் அவர் அடிக்­கடி செல்­லும் இடங்­க­ளுக்­கும் குற்­ற­வாளி செல்­லா­மல் தடுத்­தல், பாதிக்­கப்­பட்­ட­வ­ரைப் பார்க்க அல்­லது அவ­ரு­டன் தொடர்­பு­கொள்ள முடி­யா­மல் குற்­ற­வா­ளி­யைத் தடுத்­தல் ஆகி­ய­வையே அம்­மூன்று புதிய அம்­சங்­கள்.

குற்­ற­வாளி மன­நோ­யால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தால் அவர் கட்­டா­ய­மாக சிகிச்சை பெற­வும் நீதி­மன்­றம் உத்­த­ர­வி­ட­லாம்.

சென்ற ஆண்டு குடும்ப வன்­முறை தொடர்­பில் 2,254 புதிய புகார்­க­ளைச் சமு­தாய, குடும்ப அமைச்சு விசா­ரித்­தது. 2021ஆம் ஆண்­டில் இந்த எண்­ணிக்கை 2,346ஆக இருந்­தது.

தேசிய வன்­மு­றைத் தடுப்பு, பாலி­யல் துன்­பு­றுத்­தல் நேரடி அழைப்பு எண்­ணிற்­குக் கடந்த 2021ஆம் ஆண்டு 8,400 அழைப்­பு­கள் வந்த நிலை­யில், சென்ற ஆண்டு அந்த எண்­ணிக்கை 10,800ஆக அதி­க­ரித்­தது.

தனி­ந­பர் பாது­காப்பு ஆணை கோரு­வ­தற்­கான குறைந்­த­பட்ச வய­தை­ 21லிருந்து 18ஆகக் குறைக்கவும் புதிய மசோதா வழி­வகுக்­கும்.

இத­னால், துன்­பு­றுத்­தலை எதிர்­கொண்ட இளம் வய­தி­ன­ரும் பாது­காப்பு கோர­லாம்; தனி­ந­பர் பாது­காப்பு ஆணை சார்ந்த நட­வடிக்­கை­களில் தாங்­களே முன்­னி­லை­யா­க­லாம்.

குடும்ப வன்­மு­றைப் பணிக்­குழு கடந்த 2021ஆம் ஆண்டு முதன்­மு­த­லில் இந்­தப் பரிந்­து­ரை­களை வெளி­யிட்­டது.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்­டு துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங்­கும் உள்­துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் முகம்­மது ஃபைஷல் இப்­ரா­ஹி­மும் அக்­கு­ழு­வின் தலை­வர்­க­ளாக இருந்­த­னர்.

பரிந்­து­ரைக்­கப்­பட்ட மாற்­றங்­கள் தொடர்­பில் 2022 ஏப்­ர­லில் சமு­தாய, குடும்ப அமைச்சு பொது­மக்­க­ளின் கருத்­து­களை அறிந்­தது. பொது­மக்­கள் அம்­மாற்­றங்­க­ளுக்­குப் பேரா­த­ரவு தெரி­வித்­த­னர்.

புதிய மாற்­றங்­க­ளின்­படி, குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் அடை­யா­ளங்­களும் பாது­காக்­கப்­படும்.

குடும்ப வன்­முறை சார்ந்த பாது­காப்பு ஆணை­களை மீறு­வோர்க்­கான தண்­ட­னை­களும் கடு­மை­யாக்­கப்­படும்.

முதல்­முறை அக்­குற்­றம் புரி­வோர்க்கு $10,000 வரை அப­ரா­தம் அல்­லது ஓராண்­டு­வரை சிறை­யும் அல்­லது இவ்­விரு தண்­ட­னை­களும் விதிக்­கப்­ப­ட­லாம். இப்­போது அவர்­க­ளுக்கு $2,000 வரை அப­ரா­தம் அல்­லது ஆறு மாதம்­வரை சிறை அல்­லது அவ்­விரு தண்­ட­னை­க­ளை­யும் விதிக்க முடி­யும்.

அத்­து­டன், குற்­ற­வா­ளி­கள் மறு­வாழ்வு நட­வடிக்­கை­களில் பங்­கேற்­ப­தை­யும் புதிய மசோதா உறு­தி­செய்­யும். ஆலோ­சனை, கட்­டாய சிகிச்­சைக்­கான மதிப்­பீட்டு ஆணை, கட்­டாய சிகிச்சை ஆகி­ய­வற்றை மீறு­வோர்க்கு $2,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

அவசரகால உதவிக் குழு உடனடியாகப் பாதுகாப்பு வழங்கும்

அதிக ஆபத்தை விளை­விக்­க­வல்ல குடும்ப வன்­முறை தொடர்­பில் புகார் வந்­தால், பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உட­ன­டி­யாக உதவி, அவர்­க­ளைப் பாது­காக்­கும் நோக்­கில், குடும்ப வன்­முறை அவ­ச­ர­கால உத­விக் குழு­வைக் காவல்­துறை சம்­பவ இடத்­திற்கு அனுப்­பும்.

சமு­தாய, குடும்ப அமைச்­சின்­கீழ் வரும் இந்­தப் புதிய உத­விக் குழு 24 மணி நேர­மும் செயல்­படும்.

பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் வீட்­டில் அல்­லது அவர் அடிக்­கடி செல்­லும் இடங்­களில் அவ­ரைத் துன்­பு­றுத்­தி­ய­வர் இருப்­ப­தை­யும் தொடர்­பு­கொள்­வ­தை­யும் தடுக்­கும் வகை­யில் உத­விக் குழு­வைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் அவ­ச­ர­கால ஆணை­யைப் பிறப்­பிக்க முடி­யும்.

பாதிக்­கப்­பட்­ட­வர் தனி­ந­பர் பாது­காப்பு ஆணை கோரி விண்­ணப்­பம் செய்ய ஏது­வாக அந்த ஆணை 14 நாள்­களுக்கு நடப்­பி­லி­ருக்­கும். அதனை மீறு­வோர் கைது­செய்­யப்­ப­ட­லாம்.

மாதர் சாச­னத் திருத்த மசோ­தா­வில் இடம்­பெற்­றுள்ள மாற்­றங்­களில் இப்புதிய 24 மணி நேர அவ­ச­ர­கால உத­விக் குழு­வும் அடங்­கும்.