சிங்கப்பூர் காவல்துறை மீதான நம்பிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், காவல்துறைக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவை எளிதாகக் கருதிவிடக்கூடாது என்றும் அந்த உறவு எதிர்மறையாக மாற அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் நேற்று நடைபெற்ற காவல்துறை பணித்திட்டக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பங்கேற்று திரு சண்முகம் பேசினார்.
"உலகின் பல பகுதிகளில் காவல்துறை என்பது சமூகத்தின் பாதுகாவலன் என்பதற்குப் பதில் எதிரியாகப் பார்க்கும் சம்பவங்களை நாம் படிப்பினை களாக எடுத்துக்கொள்ள வேண்டும்," என்றார் அவர்.
அதற்கு எடுத்துக்காட்டாக அமெரிக்க சம்பவத்தை அவர் விளக்கினார்.
"2020 ஜனவரியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் தோல்வியைத் தழுவியபோது அவரது ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அங்கு அப்போது நிலவிய அரசியல் சூழலில் காவல்துறை சிக்கிக்கொண்டது.
"சொத்துகள் சேதமடைந்து, தாக்குதலில் 140க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமுற்ற நிலையில் 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
"இந்தச் சம்பவத்தை அரசியலிலும் ஊடகத்திலும் இருந்த சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயன்றனர்.
"அமெரிக்க நாடாளுமன்ற நாயகரால் பகிர்ந்துகொள்ளப்பட்ட படக்காட்சிகளைப் பயன்படுத்தி 'ஃபாக்ஸ் நியூஸ்' இவ்வாண்டின் தொடக்கத்தில் செய்தி வெளியிட்டபோது, நடந்த சம்பவங்கள் குறித்து ஜனநாயகவாதிகள் (அதிபர் ஜோ பைடன் கட்சி) அமெரிக்கர்களிடம் பொய் சொன்னார்கள் என்று செய்தி வாசித்தவர் குறிப்பிட்டார்.
"மன்ற நாயகர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். இதுபோன்ற சம்பவங்கள் காவல்துறையை அரசியல் விவாதங்களுக்கு மத்தியில் கொண்டு சென்று நிறுத்திவிடுகின்றன.
"பதவியைப் பிடிப்பதற்காக அரசியல் குழப்பம் நிகழும் எல்லா ஜனநாயக நாடுகளிலும் இதுபோன்று நிகழக்கூடும்.
"சில குழுக்கள் அல்லது மக்களில் சிலர் காவல்துறையை பலிகடா ஆக்கலாம். மேலும், அரசியல் நிகழ்வுகளுக்கு அவர்களைத் துணைபோகச் செய்யலாம்.
"நாம் இதுபோன்றவற்றை தவிர்க்க வேண்டும். காவல்துறை என்பது நடுநிலையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட நாம் நமது ஆதரவை வழங்கவேண்டும்.
"அரசியல் நோக்கத்திற்காக அந்தத் துறையைப் பயன்படுத்தக்கூடாது. அதேபோல அரசியல் நடவடிக்கைக்குக் காவல்துறை பலியாகிவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்," என்று அமைச்சர் சண்முகம் கேட்டுக்கொண்டார்.
மேலும், அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் நிலைமையைச் சமாளிக்க காவல்துறை படும் பாட்டையும் அதனால் சட்டம் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பதையும் விளக்க அங்குள்ள துப்பாக்கிப் பயன்பாட்டை திரு சண்முகம் குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், "சிங்கப்பூர் உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் கிட்டத்தட்ட வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்பதை நம்ப கடினமாக உள்ளது.
"இருப்பினும் ஒவ்வோர் ஆண்டும் 50 முதல் 60 வரையிலான காவல்துறை அதிகாரிகள் அங்கு துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பலியாகிறார்கள்.
"மேலும், சுடப்பட்ட தமது சகா பற்றி அறியும் மற்ற அதிகாரிகளின் மனப்போக்கு பாதிக்கப்படுகிறது.
"நமது 3.6 மில்லியன் குடிமக்களுக்கு நான்கு மில்லியன் துப்பாக்கிகள் இருக்குமானால் நமது அதிகாரிகள் முற்றிலும் மாறுபட்ட மனப்போக்கைக் கொண்டிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்.
"அப்படிப்பட்ட நிலையில் ஒவ்வொரு சம்பவத்தையும் அச்சத்துடன் அணுகவேண்டி வரும். சின்னஞ்சிறிய சந்தேகம் ஏற்பட்டால்கூட சுடலாம் அல்லது சுடப்படலாம் என்று மனதிற்குள்ளேயே கருதும் நிலை ஏற்படலாம்," என்றார் திரு சண்முகம்.

