36.2 டிகிரி பதிவானது; நேற்றுத்தான் இவ்வாண்டில் சிங்கப்பூரின் அதிக வெப்பமான நாள்

2 mins read

சிங்­கப்­பூ­ரில் நேற்று பதி­வான 36.2 டிகிரி செல்­சி­யஸ் வெப்­பம் இந்த ஆண்­டின் ஆக அதிக வெப்­ப­மா­கும்.

சுவா சூ காங் தெற்கு வட்­டா­ரத்­தில் நேற்றுப் பிற்­ப­கல் 2.46 மணிக்கு பதி­வான இந்த வெப்­பம் இதற்கு முன்­னர் ஏப்­ரல் 14ஆம் தேதி அட்மிரல்­டி­யில் பதி­வான 36.1 டிகி­ரியை மிஞ்­சி­விட்­டது.

37 டிகிரி என்று 1983ஆம் ஆண்டு பதி­வா­னதே சிங்­கப்­பூர் வர­லாற்­றில் உச்ச வெப்­பம். அந்த ஆண்டு ஏப்­ரல் 17ஆம் தேதி தெங்கா வட்­டா­ரத்­தில் அந்த மித­மிஞ்­சிய வெப்­ப­நிலை பதி­வா­னது.

இவ்­வாண்­டின் வெப்பநிலை குறித்து இதற்கு முன்­னர் முன்­னு­ரைத்த சிங்­கப்­பூர் வானிலை ஆய்­வ­கம், ஏப்­ரல் மாதத்­தில் தொடங்­கும் வெப்­பம் மே மாதத்­தின் முதல் பாதி வரை தொட­ர­லாம் என்று தெரி­வித்து இருந்­தது. ஆண்­டின் எல்லா மாதங்­களைக் காட்­டி­லும் மே மாதம் சூடாக இருப்­பது வழக்­கம் என்­றும் அப்­போது அது குறிப்­பிட்டு இருந்­தது. அதற்­கேற்ப இந்த மாதத்­தின் முதல் பாதி வெப்­ப­மா­கத் தொட­ர்கிறது. பெரும்­பா­லான நாள்­களில் பிற்­ப­க­லில் பதி­வான அன்­றாட சரா­சரி வெப்ப நிலை 34 டிகி­ரி­யாக உள்­ளது.

"மேக­மூட்­டம் குறைந்த நாள்­களில் அன்­றாட சரா­சரி வெப்­பம் 35 டிகிரி வரை தொட்­டது," என்று ஆய்­வ­கம் தெரி­வித்­துள்­ளது.

சூடான சூழ்­நி­லை­யைச் சமா­ளிப்­பதில் மாண­வர்­க­ளுக்­கும் அலு­வ­லர்­களுக்­கும் உத­வக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களில் பள்­ளிக்­கூ­டங்­களில் நடப்­பில் இருப்­ப­தாக கல்வி அமைச்சு நேற்று கூறி­யது.

உதா­ர­ணத்­திற்கு, வெப்­ப­நிலை பொது­வாக அதி­க­ரித்­துக் காணப்­படும் காலை 10.30 மணி முதல் பிற்­ப­கல் 3.30 மணி­வரை வெளிப்­புற நட­மாட்ட நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்­பதை மாண­வர்­கள் குறைத்­துக்­கொள்­ளு­மாறு பள்­ளி­கள் கேட்­டுக்­கொள்­ளும் என்­றது அமைச்சு.

"சூட்­டைச் சமா­ளிப்­ப­தில் மாண­வர்­களுக்குப் பள்­ளி­கள் சிறப்­பான முறை­யில் உத­வ­லாம். தேவைக்­கேற்ப அவர்­க­ளின் உடை­யில் மாற்­றம் செய்­து­கொள்ள அனு­ம­திக்­கப்­படும். சில நேரங்­களில் டி-சட்டை அணிந்­தும் அவர்­கள் பள்­ளிக்­குச் செல்­ல­லாம்.

"வெப்­ப­மான சூழ­லை­யும் மாண­வர்­கள் மற்­றும் அலு­வ­லர்­க­ளின் நலனை­யும் பள்­ளிக்­கூ­டங்­க­ளு­டன் இணைந்து அமைச்சு அணுக்­க­மா­கப் பணி­யாற்­றும்.

"குறிப்­பாக, அதிக வெப்­பத்­தைத் தாங்க இய­லா­மல் எளி­தில் பாதிப்­படை­யக்­கூ­டி­ய­வர்­கள் மீது கவ­னம் செலுத்­தப்­படும்," என்று அது தெரி­வித்­தது.