வீவக வீடுகள் சிலவும் அமையக்கூடும்: துறைசார் கவனிப்பாளர்கள்
ஸியோன் ரோட்டில் வீடமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு நிலப்பகுதிகளில் புதிய வீடுகள் கட்டப்படவிருக்கின்றன.
'செர்ஸ்' எனப்படும் நிலப் பயன்பாட்டை அதிகரிக்கவும் மறுமேம்பாட்டிற்கும் உதவும் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அவ்விரண்டு பகுதிகளும் அடங்கும்.
இரு நிலப்பகுதிகளிலும் பொது வீடமைப்பின்கீழ் வீடுகள் கட்டப்படக்கூடும் என்று துறைசார் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
சென்ற வெள்ளிக்கிழமை நில மறுசீரமைப்பு ஆணையம் அதன் பெருந்திட்டத்தில் திருத்தத்தைப் பரிந்துரைத்தது.
ஹேவ்லாக் பகுதியில் ஏறக்குறைய 2.3 ஹெக்டர் பரப்பளவில் (மூன்று காற்பந்துத் திடல்களுக்கு மேற்பட்ட பரப்பளவு) அருகருகே அமைந்துள்ள இரண்டு நிலப்பகுதிகள் பற்றி அந்தத் திருத்தம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அந்த நிலப்பகுதிகளுக்கும் 'கிரேட் வோர்ல்டு மால்' கடைத்தொகுதிக்கும் இடையே அலெக்ஸாண்டிரா கால்வாய் அமைந்துள்ளது.
அந்த நிலப்பகுதிகளில் குடியிருப்புக் கட்டடங்களுடன் வர்த்தகக் கட்டடங்கள், அலெக்ஸாண்டிரா கால்வாய்க்கு அருகே பூங்கா போன்றவற்றை அமைக்கத் திட்டமிடுவதாக ஆணையம் கூறியது.
இரண்டு நிலப்பகுதிகளில் தெற்கில் அமைந்துள்ளது ஏறக்குறைய 1.45 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. தற்போது ஹோட்டல் கட்ட ஒதுக்கப்பட்டுள்ள அந்த நிலப்பகுதியில் குடியிருப்புக் கட்டடங்கள் அமைக்கலாம் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அதில் 800 முதல் 850 அடுக்குமாடி வீடுகளைக் கட்ட இயலும் என்று சொத்து இணையவாசலான 'மொகல்.எஸ்ஜி'யின் தலைமை ஆய்வு அதிகாரி நிக்கொலஸ் மாக் குறிப்பிட்டார்.
வடக்கில் உள்ள நிலப்பகுதி ஏற்கெனவே குடியிருப்புப் பேட்டைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 0.9 ஹெக்டர் பரப்பளவு கொண்ட அதில், 500 முதல் 550 வீடுகளைக் கட்டலாம் என்றார் அவர்.
தனியார் கூட்டுரிமை வீடுகளுக்கான ஏலக்குத்தகையின் மூலம் அவ்விரு நிலப்பகுதிகளும் விற்பனைக்கு விடப்பட்டால் அரசாங்கத்துக்கு அதிக லாபம் கிட்டும்.
ஆனால் அங்கு தனியார் வீடுகள் மட்டுமன்றி பொது வீடமைப்பின்கீழ் அமையும் வீடுகளும் கட்டப்படக்கூடும் என்றார் 'புரோபர்ட்டி குரு சிங்கப்பூர்' நிறுவனத்தின் சிங்கப்பூர்க் கிளை மேலாளர் டான் டீ கூன்.
சமூகத்தில் பிளவுகளைக் குறைக்கும் நோக்கில் முக்கிய இடங்களில் அனைவரையும் உள்ளடக்கும் நிலைப்பாட்டிற்கு அரசாங்கம் முன்னுரிமை தருவதை அவர் சுட்டினார்.
மத்திய வர்த்தக வட்டாரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் அவ்விரு நிலப்பகுதிகளும் அமைந்து உள்ளன.
அங்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகள் கட்டப்பட்டால் அவை முதன்மை வட்டாரப் பொது வீடமைப்பு மாதிரி (பிஎல்எச்) வீடுகளாகவே அமையும் என்று கவனிப்பாளர்கள் பலரும் கருத்துரைத்துள்ளனர்.
அந்த நிலப்பகுதிகளுக்கு அருகே கட்டப்படும் இதர கட்டுமானங்கள் அத்திட்டத்தின்கீழ் அமைந்திருப்பதை அவர்கள் சுட்டினர்.
ஏற்கெனவே அங்கு அமைந்திருந்த வீவக வீடுகள், 2013ஆம் ஆண்டு 'செர்ஸ்' திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்டு இடிக்கப்பட்டன. அங்கிருந்த 636 வீடுகளைச் சேர்ந்தோருக்கு 500 மீட்டர் தொலைவில் 'ஹேவ்லாக் வியூ' அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் வழங்கப்பட்டன.
அந்த வட்டாரத்தில் கடந்த 16 மாதங்களில் சராசரியாக, சதுர அடிக்கு $2,842 என்ற மதிப்பில் கூட்டுரிமை வீடுகளின் விலை அமைந்திருப்பதாகக் கூறிய கவனிப்பாளர்கள், 'ஜிஎல்எஸ்' எனப்படும் அரசாங்க நில விற்பனை அறிவிக்கப்பட்டால் விலை மேலும் ஏறக்கூடும் என்று குறிப்பிட்டனர்.

