மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ‘மிட் வேலி மெகாமால்’ கடைத்தொகுதியில் நேற்றுக் காலை ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டது. அந்தக் கடைத்தொகுதி நேற்று மூடப்பட்டு இருந்தது.
பிற்பகல் 12.29 மணிக்குள், அதாவது தீ மூண்டு ஏறக்குறைய இரண்டு மணிநேரம் கழித்து அது முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டதாக கடைத்தொகுதி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
வெளிப்புற துணை நிலையத்தில் தீ மூண்டது குறித்து காலை 10.30 மணிக்கு கடைத்தொகுதியின் தீக்கட்டுப்பாட்டு நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.
காலை 10.32 மணிக்கு தகவல் வந்ததைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.
“தீ விபத்தில் எவரும் காயம் அடைந்ததாகவோ உயிருடற்சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை,” என்று குறிப்பிட்ட கடைத்தொகுதி நிர்வாகம், சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகச் சொன்னது.
மின்மாற்றியைக் குளிரூட்டும் எண்ணெய் அதிகப்படியாக சூடாகி தீப்பிடித்துக்கொண்டதே துணை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம் என நம்பப்படுவதாக நகர தீயணைப்பு, மீட்புத் துறை உதவி இயக்குநர் எம். ஃபட்டா எம். அமின் தெரிவித்தார்.
மின்மாற்றியைக் குளிரூட்ட 12,400 லிட்டர் எண்ணெய் பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறினார்.
“குளிரூட்டும் எண்ணெய்க்கு 137 டிகிரி செல்சியஸ் தீப்பற்றுநிலை இருப்பதால், அதனால் தீ மூண்டிருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம்,” என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தீ விபத்து காரணமாக கடைத்தொகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தடைபட்ட மின்விநியோகம் பிற்பகல் 12.30 மணியளவில் வழக்கநிலைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘மிட் வேலி மெகாமால்’, ‘தி கார்டன்ஸ் மால்’ கடைத்தொகுதிகளில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதாகச் சொன்ன நிர்வாகம், ‘மிட் வேலி மெகாமால்’ அமைந்துள்ள ‘மிட் வேலி சிட்டி’யில் அலுவலகங்கள், ஹோட்டல்கள், கடைகள் அனைத்தும் இன்று மீண்டும் திறக்கப்படும் என்று கூறியது.
‘மிட் வேலி மெகாமால்’ கடைத்தொகுதிக்கு அருகில் இருக்கும் ‘நூ சென்ட்ரல் மால்’ கடைத்தொகுதியும் மூடப்பட்டது. திடீர் மின்தடையை அது சுட்டியது.
ஆனால், மின்விநியோகம் தொடர்பில் வேறொரு பிரச்சினை காரணமாகவே அங்கு மின்தடை ஏற்பட்டது என மின்விநியோக நிறுவனமான டிஎன்பி தெரிவித்தது.